Published : 13 Mar 2025 05:33 AM
Last Updated : 13 Mar 2025 05:33 AM
சென்னை: தமிழகத்தில் வழக்கத்துக்கு மாறாக மார்ச் மாதத்தில் 93 சதவீத இடங்களில் மழை பெய்துள்ளது. 26 இடங்களில் கனமழையும், 4 இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. மார்ச் 6-ம் தேதி 8 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டி சதம் அடித்தது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.
இந்த நிலையில், பூமத்திய ரேகையை ஒட்டிய மேற்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் இருந்து தமிழக கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதி வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியது. இதனால் வழக்கத்துக்கு மாறாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. தென் மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், எதிர்பாராத வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரவலாக கனமழை கொட்டியது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது: மார்ச் மாதத்தில் வழக்கமாக வீசும் கிழக்கு திசை காற்றில் திடீரென ஏற்பட்ட வேக மாறுபாடு மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஆகிய இரண்டும் இணைந்ததால் வழக்கத்துக்கு மாறாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் வட மாவட்டங்களில் 90 சதவீத பகுதிகளிலும், தென் மாவட்டங்களில் 96 சதவீத பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் 16 செ.மீ., கள்ளக்குறிச்சியில் 15 செ.மீ. மழை பெய்துள்ளது. 26 இடங்களில் கனமழை, 4 இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளது.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்று முதல் 16-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 17, 18-ம் தேதிகளில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சில பகுதிகளில் இன்று முதல் 15-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT