Published : 12 Mar 2025 11:39 AM
Last Updated : 12 Mar 2025 11:39 AM

“அரசு பள்ளிகளின் இணைய வசதி கட்டணத்தை உள்ளாட்சி அமைப்புகளிடம் திணிக்காதீர்!” - ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் | கோப்புப் படம்.

சென்னை: “அரசு பள்ளிகளின் இணைய வசதி கட்டணத்தை உள்ளாட்சிகள் செலுத்துவது அரசின் தோல்வி” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும், இணையவசதி கட்டணத்தை தமிழக அரசு தான் ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர உள்ளாட்சி அமைப்புகள் மீது திணிக்கக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு இணைய வசதி ஏற்படுத்துவதற்காக கட்டணங்களை உள்ளாட்சி அமைப்புகளே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகள் போதிய வருவாயும், நிதியும் இல்லாமல் தடுமாறி வரும் நிலையில், இணையக் கட்டணத்தையும் செலுத்த வேண்டிய சுமையை அவற்றின் மீது சுமத்துவது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் 24 ஆயிரத்து 338 அரசு தொடக்கப்பள்ளிகளும், 6992 அரசு நடுநிலைப் பள்ளிகளும், 3129 அரசு மேல்நிலைப் பள்ளிகளும் என 37 ஆயிரத்து 553 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பான்மையான பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள், உயர் தொழில்நுட்ப கம்ப்யூட்டர் ஆய்வகம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள பள்ளிகளிலும் அத்தகைய கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

24,338 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு இணைய வசதி பெறுதல் மற்றும் 14,665 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கும், 4,934 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கும் இணைப்புக் கட்டணம் மற்றும் ஒருமுறைக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதற்குத் தேவையான ரூ.189.11 கோடியை பள்ளிக்கல்வித்துறை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், பேரூராட்சிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் ரூ.5.49 கோடியை மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்துள்ள பள்ளிக்கல்வித் துறை, மீதமுள்ள ரூ.183.62 கோடியை உள்ளாட்சி அமைப்புகள் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் போதிய நிதியும், வருவாயும் இல்லாமல் வளர்ச்சிப் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. இந்த நிலையில் இணைய வசதிக் கட்டணத்தையும் உள்ளாட்சி அமைப்புகளே ஏற்க வேண்டும் என்றால், அதை ஊரக உள்ளாட்சி அமைப்புகளால் ஏற்க முடியாது. அதனால், ஊரக உள்ளாட்சிகளில் அடிப்படை வசதிகளைக் கூட செய்ய முடியாத நிலை உருவாகும். அதை அரசு தவிர்க்க வேண்டும்.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கான இணைய வசதிக் கட்டணம் ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதியிலிருந்து வழங்கப்பட்டு வந்தது. மும்மொழிக் கொள்கையை செயல்படுத்த தமிழக அரசு மறுத்துவிட்டதையடுத்து அந்த நிதியை மத்திய அரசு நிறுத்தி விட்டது. அத்தகைய சூழலில் இணையவசதிக் கட்டணத்தை தமிழக அரசு தான் ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர உள்ளாட்சி அமைப்புகள் மீது திணிக்கக் கூடாது.

பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை. அதே நேரத்தில் மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை ஏற்க மறுப்பதற்காக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு மறுப்பது நியாயமல்ல.

இந்த விவகாரத்தில் தமிழக அரசின் பக்கம் தான் நியாயம் உள்ளது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குத் தொடர்ந்தால் தமிழகத்திற்கான நிதி உடனடியாக கிடைத்து விடும். ஆனால், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தமிழகத்திற்கு நிதியையும், நீதியையும் பெறுவதை விட, இந்த சிக்கலை வைத்து அரசியல் செய்வதில் தான் திமுக அரசு தீவிரம் காட்டுகிறது.

ஒருங்கிணைந்தக் கல்வித் திட்ட நிதியை மத்திய அரசிடமிருந்து பெறாதது தமிழக அரசின் தோல்வி. அதற்காக உள்ளாட்சி அமைப்புகளைத் தண்டிப்பது எந்த வகையிலும் நியாயமல்ல. எனவே, அரசு பள்ளிகளுக்கான இணைய வசதிக் கட்டணத்தை உள்ளாட்சி அமைப்புகள் தான் ஏற்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதியைப் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x