Published : 09 Mar 2025 07:34 AM
Last Updated : 09 Mar 2025 07:34 AM
சென்னை: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கையாள தமிழகத்தில் 22 இடங்களில் 26,000 பெண் போலீஸாருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கையாளுவதில் பெண் போலீஸாரின் தொழில்முறை திறன்களை மேம்படுத்தும் வகையில் சிறப்பு திறன் பயிற்சி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இதனைச் செயல்படுத்தும் விதமாக தமிழகத்தில் உள்ள பெண் சார்பு ஆய்வாளர்கள் முதல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வரை உள்ள 2,100 பெண் காவல் அதிகாரிகளுக்கு 5 நாட்கள் தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்திலும், 2-ம் நிலை பெண் காவலர் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர் வரை உள்ள 23,805 பெண் போலீஸாருக்கு 3 நாட்களும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
அந்தவகையில், சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, ஆவடி, தாம்பரம், காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், திருச்சி, தஞ்சாவூர், கோவை, சேலம், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய 15 பணியிடை பயிற்சி மையங்களிலும், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருச்சி, சேலம், மதுரை, தூத்துக்குடி ஆகிய 7 இடங்களில் உள்ள காவல் பயிற்சி பள்ளிகளிலும் டிஜிபி (பயிற்சி) சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக, ரூ.91.57 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT