Published : 08 Mar 2025 06:48 PM
Last Updated : 08 Mar 2025 06:48 PM
நாகர்கோவில்: “சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகளை கடக்கும் முன் இந்தியா வல்லரசு ஆவதற்கான அனைத்து வேலைகளையும் இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது” என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
கன்னியாகுமரிக்கு வந்த இஸ்ரோ தலைவர் நாராணன் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள். ஒரு சமுதாயம், நாடு, குடும்பம் முன்னேற வேண்டும் என்றால் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமபங்கு சம உரிமை வேண்டும். ஆண், பெண் என பிரித்து பார்க்கவில்லை. தகுதியான மற்றும் திறமையானவர்களுக்கு வாய்ப்பு, முன்னுரிமை வழங்கப்படுகிறது. சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்1 திட்டத்தின் இயக்குநர் நிகார்சாஜ் ஒரு பெண் ஆவார்.
மேலும் சந்திராயன் 2 திட்டத்தின் இயக்குநராக வனிதா என்பவர் பணி யாற்றினார். சந்திராயன் 3 வெற்றி பெறும் தருணத்தின்பொது அங்கு இருந்தவர்களில் 40 சதவீதம் பெண்கள் ஆவர். ஆண் பெண் பாகுபாடு பார்க்காமல் திறமையை பார்த்து வாய்ப்பு வழங்கப்படும் நிறுவனம் இஸ்ரோ.
சந்திராயன் 3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி பல்வேறு தகவல்களை சேகரித்து அனுப்பி வருகிறது. இதை உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளுக்கு வழங்கி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குலசேகரப்பட்டணத்தில் ராக்கெட் ஏவுதள பணிகள் தொடங்கி நடை பெற்று வருகிறது. சுமார் ஒன்றரை ஆண்டில் இந்த பணிகள் முடிக்கப்பட்டு இங்கிருந்து ராக்கெட் விண்ணுக்கு ஏவப்படும்.
சந்திரயான் 4 திட்டம் மூலம் நிலவில் தரை இறங்க அங்கிருந்து தாது மற்றும் கனிமங்களை எடுத்து வந்து ஆராய்ச்சி செய்ய உள்ளோம். 9200 கிலோ எடை கொண்ட இரு சந்திரன் 4 ராக்கெட் செலுத்தப்பட உள்ளது. 2028-ல் திட்டம் நடைபெறும் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
சர்வதேச கூட்டு முயற்சி என்பது தேவைதான், நாசா - இஸ்ரோ சிந்தட்டிக் அப்ரேசெச்சர் என்ற செயற்கைகோள் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் கூட்டு முயற்சி மூலம் தயாராகி வருகிறது. ஜி-20 நாடுகளுக்கான ஜி- 20 செயற்கைகோள் தயார் செய்ய உள்ளோம் இது நமது தலைமையில் நடைபெற்று வருகிறது.
மீனவர்களுக்கு என்று பிரத்தியேக செயலி உருவாக்கப்பட்டு அது பயன்பாட்டில் உள்ளது. இதில் சர்வதேச எல்லை எங்கு உள்ளது, மீன்கள் எங்கு அதிக அளவில் உள்ளது, வானிலை எப்படி உள்ளது போன்ற பல தகவல்கள் நேரடியாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனை மீனவ மக்கள் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்.
நிலவில் 8 விதமான தாதுகள் மற்றும் கனிமங்கள் உள்ளது என்பதை கண்டுபிடித்து உள்ளோம். சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகளை கடக்கும் முன் இந்தியா வல்லரசு ஆகும் அதற்கான அனைத்து வேலைகளில் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT