

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க ஏதுவாக, வாட்ஸ்ஆப் செயலி வாயிலாக டிக்கெட் எடுக்கும் வசதி இன்று காலை திடீரென பாதிக்கப்பட்டது.
குறிப்பிட்ட இடத்தை சரியான நேரத்தில் பாதுகாப்பாக சென்றடைவதில் மெட்ரோ ரயில் போக்குவரத்து பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. மெட்ரோ ரயில்கள் பொருத்தவரை, சென்னையில் இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி சராசரியாக 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.
சென்னையில் மெட்ரோ ரயில்களில் பயணிக்க காகித டிக்கெட் இன்றி, வாட்ஸ் அப் செயலி வாயிலாக டிக்கெட் எடுக்கும் வசதி இருக்கிறது. பயணிகள் டிக்கெட் எடுக்க கவுன்ட்டர்களில் காத்திருக்காமல், மொபைல்போனில் எளிமையாக டிக்கெட் எடுத்து பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், வாட்ஸ் அப் செயலி வழியாக டிக்கெட் பெறும் வசதியில் இன்று காலை 8.30 மணி அளவில் தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, பிற ஆன்லைன் தளங்கள் மூலமாக, டிக்கெட்களை பெற மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவுறுத்தியது. இதையடுத்து, பேடிஎம்., சிங்கார சென்னை அட்டை மற்றும் டிக்கெட் கவுன்ட்டர்களில் எந்த பாதிப்பும் இல்லாமல், டிக்கெட் எடுத்து பயணிக்க முடிந்தது. அதேநேரத்தில், தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.