Published : 07 Mar 2025 04:21 PM
Last Updated : 07 Mar 2025 04:21 PM
வல்லிபுரம்-ஈசூர் இடையே பாலாற்றின் குறுக்கே அமைந்துள்ள தரைப்பாலம் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது. இங்கு, கோடைக்காலம் நிறைவடைவதற்குள் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க சுற்றுப்புற கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் வல்லிபுரம் மற்றும் ஈசூர் இடையே அமைந்துள்ள பாலாற்றை கடந்து செல்வதற்காக தரைப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆற்றங்கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் பல்வேறு தேவைகளுக்காக திருக்கழுக்குன்றம் மற்றும் கருங்குழி பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இதனிடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் இந்த தரைப்பாலம் உட்பட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலங்கள் முற்றிலும் சேதமடைந்தன.
இதனால், கிராம மக்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பாலாற்றில் வெள்ளம் குறைந்ததும், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை மூலம் தரைப்பாலங்கள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
மேலும், நெடுஞ்சாலைத்துறை மூலம் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க ரூ.60 கோடி மதிப்பில் திட்டமதிப்பீடு தயாரித்து, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், இதுவரையில் நிதி ஒதுக்கீடு செய்யாததால் பணிகள் ஏதும் தொடங்கப்படாமல் உள்ளது. தற்போது, தரைப்பாலத்தில் பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்வதால் மீண்டும் பாலம் சேதமடையும் நிலையில் உள்ளது.
அதனால், பாலாற்றில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டால் போக்குவரத்து பாதிக்கப்படாத வகையில், கோடைக்காலம் நிறைவடைவதற்குள் பாலாற்றின் குறுக்க உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, வல்லிபுரம் சுற்றுப்புற கிராம மக்கள் கூறியதாவது: சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலோ, சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டாலோ, சென்னை செல்லும் வாகனங்கள் அனைத்தும் கருங்குழி பகுதியிலிருந்து மாற்றுப்பாதையில் வல்லிபுரம் பாலாற்று தரைப்பாலத்தை கடந்துதான் சென்னைக்கு செல்லும் நிலை உள்ளது.
அதனால், முக்கிய மாற்றுப்பாதையான இச்சாலையில் உள்ள தரைப்பாலத்தை மாற்றி, கோடைக்காலம் நிறைவடைவதற்குள் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டியது அவசியமாகிறது. அதனால், தமிழக அரசு உடனடியாக இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் நிதி ஒதுக்க வேண்டும் என்றனர்.
திட்டமதிப்பீடு தயார்: இதுகுறித்து, செங்கல்பட்டு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வல்லிபுரம்-ஈசூர் இடையேயான பாலாற்றின் குறுக்கே அமைந்துள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் சேதமடைந்ததால், பாலாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.60 கோடி மதிப்பில் திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டது.
தற்போது, கூடுதல் செலவுகளை இணைத்து ரூ.75 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பிஉள்ளோம். மேலும், வெள்ள பாதிப்பு மற்றும் நெடுஞ்சாலைத்துறை திட்டத்தில் நிதி ஒதுக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம். விரைவில் அறிவிப்பு வரும் என நம்புகிறோம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT