

கோவை: கோவையில் உள்ள பாரதியார் பல்கலை. வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டதால் விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு, 200 மாணவர்கள் பாதுகாப்பாக விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். வனத்துறையினர் தேடுதல் பணியை தொடங்கியுள்ளனர்.
கோவை மருதமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதியில் அமைந்துள்ளது பாரதியார் பல்கலைக்கழகம். நாளை விளையாட்டு போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு ஆசிரியர்கள் இன்று காலை பயிற்சிக்காக மைதானம் சென்றனர். அப்போது சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விளையாட்டுப் போட்டி பயிற்சி மேற்கொள்ள இருந்த 200 மாணவ, மாணவிகளும் பாதுகாப்பாக விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
பல்கலைக்கழக வளாகத்தில் நிர்வாக பணி அலுவலர்கள் தவிர்த்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பல்கலைக்கழக வளாகத்தில் வனத்துறையினர் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.