Published : 05 Mar 2025 06:47 AM
Last Updated : 05 Mar 2025 06:47 AM
சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செயின்ட் கோபேன் இந்தியா நிறுவனத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் 54-வது தேசிய பாதுகாப்பு தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அனைவரும் தேசிய பாதுகாப்பு தின உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். பின்னர் அமைச்சர் உரையாற்றும் போது, ``தொழிலாளர்கள் பாதுகாப்பாகப் பணிபுரிவது முக்கியம்.
தொழிலாளர்கள் ஆரோக்கியம், நலனை உறுதி செய்வதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவ முடியும். தொழிலாளர்களின் உயிரைப் பாதுகாக்க அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பணியிடங்களில் அபாயங்களைத் தடுக்க முறையான திட்டமிடல் அவசியம். தொழிலாளர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலனைப்பாதுகாக்க அரசு பல்வேறு முன்னெடுப்புகளை செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் தொகுப்பு தனிநபர் விபத்து காப்பீட்டுத் தொகை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. முதல்வரின் அறிவிப்பின்படி பட்டாசு ஆலை விபத்துகளில் இரு பெற்றோரை இழக்கும் குழந்தைகளின் கல்விக்கு உதவ நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வெப்ப அலை காரணமாக உயிரிழக்கும் தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.
பாதுகாப்பு என்பது தொழிலாளர்கள், தொழிற்சாலை நிர்வாகம் ஆகியோரின் கூட்டுப் பொறுப்பு என்பதால் பணியிடங்களில் விபத்தில்லா நிலையை அடைய அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்’’ என்றார்.‘தொழில் சார்ந்த வெப்ப அபாயங்கள்’ குறித்த கையேடு விழாவின்போது வெளியிடப் பட்டது. நிகழ்ச்சியில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் செ.ஆனந்த் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT