

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் வரும் 14-ம் தேதி பட்ஜெட் தாக்கலின் போதே முதல் முறையாக பொருளாதார ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 14-ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம், காலை 9.30 மணிக்கு 2025-26-ம் ஆண்டுக்கான தமிழக பட் ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார். அன்றைய தினமே பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. தமிழக அரசு முதன் முறையாக இதுபோன்ற பொருளாதார ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்கிறது.
இந்த ஆய்வு அறிக்கையில் கடந்தாண்டு, நடப்பாண்டு பொருளாதாரம் நிலை, விலைவாசி, பணவீக்கம் போன்றவைகள் இடம்பெற்றுள்ளன. பொருளாதார ஆய்வு அறிக்கை இரண்டு பகுதிகளை கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. அரசின் நிதிநிலை, உள்நாட்டு உற்பத்தி, செயல்படுத்தி வரும் திட்டங்களின் நிலை, வரும் ஆண்டுகளில் மாநில அரசின் நிதிநிலை உள்ளிட்ட பல்வேறு தரவுகள் இந்த பொருளாதார ஆய்வு அறிக்கையில் இடம்பெற்று இருக்கும்.