பசுமை மின்சாரத்தை சேமிக்கும் ‘பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ்’ திட்டத்துக்கு டெண்டர்: மின்வாரியம் அறிவிப்பு

பசுமை மின்சாரத்தை சேமிக்கும் ‘பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ்’ திட்டத்துக்கு டெண்டர்: மின்வாரியம் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் பசுமை மின்சாரத்தை சேமித்து மீண்டும் பயன்படுத்தும் வகையில், ‘பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ்’ கட்டமைப்பை செயல்படுத்தும் திட்டத்துக்கு ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய மின்வாரியம் டெண்டர் கோரி உள்ளது.

நாடு முழுவதும் சுற்றுச்சூழலை பாதிக்காத காற்றாலை, சூரியசக்தி உள்ளிட்ட பசுமை மின்சார பயன்பாட்டை அதிகரிக்குமாறு, மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. தமிழகத்தில் சூரியசக்தி, காற்றாலை மின்சாரம் அதிகம் கிடைக்கும் வகையில் சூழல் நிலவுகிறது. இதனால், பல நிறுவனங்கள் இந்த மின்நிலையங்களை அமைத்து வருகின்றன. தற்போது பசுமை மின்சாரம் உற்பத்தியான உடனேயே பயன்படுத்தப்படுகிறது. வெளிநாடுகளில் இருப்பது போன்று தமிழகத்தில் ஒருமணி நேரத்துக்கு ஆயிரம் மெகாவாட் பசுமை மின்சாரத்தை சேமித்து வைத்து பயன்படுத்தும் ‘பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ்’ கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

இதன்படி, துணைமின் நிலையங்களில் காலியாக உள்ள இடங்களில் இத்திட்டப் பணிகளை செயல்படுத்தும் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய மின்வாரியத்தின் பசுமை எரிசக்தி கழகம் டெண்டர் கோரியுள்ளது. ஒப்பந்த நிறுவனம் தன் சொந்த செலவில் பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் கட்டமைப்பை அமைத்து செயல்படுத்த வேண்டும்.

அந்நிறுவனத்தின் கட்டமைப்பில் மின்சாரத்தை மின்வாரியம் சேமித்து வைத்து பயன்படுத்தும். இதற்கு ஒரு யூனிட்டுக்கு கட்டணம் நிர்ணயித்து வழங்கப்படும். எனவே, குறைந்தக் கட்டணம் தெரிவிக்கும் நிறுவனத்துக்கு பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் கட்டமைப்பு ஏற்படுத்த அனுமதி வழங்கப்படும்.

மேலும், பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் கட்டமைப்பு ஏற்படுத்தும் நிறுவனங்களை ஊக்குவிக்க மத்திய அரசு நிதியுதவி செய்கிறது. தமிழகத்தில் ஒரு மெகாவாட் கட்டமைப்புக்கான மொத்த செலவில் 40 சதவீதம் வரை நிதியுதவி செய்யப்படுகிறது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in