

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கல்வித் தகுதி விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டுமென தொடக்கக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தொடக்கக் கல்வித் துறை அலகில் பணிபுரியும் இடைநிலை, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் ஆகியோரின் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு(டெட்) கட்டாயம் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பாணையின் மீது பி.ஆனி பாக்கிய ராணி என்பவரால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஆசிரியர்கள் பயின்ற கல்வித்தகுதி மற்றும் கல்வி நிறுவனம் போன்ற விவரங்களை அடுத்த விசாரணையில் பதிலுரையாக தாக்கல் செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. எனவே, நீதிமன்ற விசாரணைக்கு பதிலுரையாக சமர்ப்பிக்கும் வகையில் இடைநிலை, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் கல்வித் தகுதி விவரங்களை தனித்தனியாகப் பூர்த்தி செய்து இயக்குநரகத்துக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.