

சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் இருந்து மாலத்தீவு வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், நாளை தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 4 முதல் 7-ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 3, 4, 5-ம் தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 8 செ.மீ., நாலுமுக்கு, காக்காச்சி, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் 7 செ.மீ., திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் 6 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை, பாபநாசம்,தென்காசி மாவட்டம் செங்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஆகிய இடங்களில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.