Published : 28 Feb 2025 06:59 AM
Last Updated : 28 Feb 2025 06:59 AM
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தை பாஜக புறக்கணிக்க இருப்பதாகவும், அதிமுக இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாக புதிய மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் தொகை அடிப்படையிலேயே தொகுதிகள் எண்ணிக்கை மறுசீரமைப்பு செய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால், தமிழகத்தில் 8 தொகுதிகள் குறையும் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே, மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் "அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் இருந்து அதிக பிரதிநிதிகள் இருப்பார்கள். இதனால் மக்களவையில் தமிழகத்துக்கான பிரதிநிதித்துவம் குறைந்துவிடும். தமிழகத்தின் குரல் நசுக்கப்படும். இது வெறும் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை சார்ந்த கவலை மட்டும் அல்ல. இது மாநிலத்தின் உரிமை சார்ந்த கவலை" என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மார்ச் 5-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தையும் அறிவித்துள்ளார். இதில் பங்கேற்குமாறு 45 கட்சிகளின் தலைவர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, மத்திய பாஜக அரசின் மும்மொழிக் கொள்கை போன்றவற்றை எதிர்த்து வருகிறது. இந்நிலையில், தொகுதி மறுசீரமைப்பால் தமிழக தொகுதிகளின் எண்ணிக்கை குறைவதை விரும்பாது என்றும், மத்திய அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்க, நிச்சயம் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக அதிமுகவின் மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, "அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக இன்னும் முடிவெடுக்கவில்லை. விரைவில் மூத்த நிர்வாகிகள் கலந்து பேசி, தங்கள் நிலைப்பாட்டை அறிவிப்பார்கள்" என்றனர்.
பாஜக புறக்கணிப்பு? - இதற்கிடையே, கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொகுதி மறுசீரமைப்பு செய்வதால், தமிழகத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், "முதல்வர் ஸ்டாலின் கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தை பாஜக புறக்கணிக்க வாய்ப்புள்ளது. ஓரிரு நாளில் இதுகுறித்து கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்" என கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT