

ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரியில் நேற்று நடைபெற்ற கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாம் தமிழர் கட்சி ஜனநாயகம் உள்ள கட்சி. இதன் கொள்கையை ஏற்று வருபவர்கள், பின்னர் முரண்பாடு காரணமாக வெளியேறுகிறார்கள். இது கட்சி பிரச்சினை. இதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். தமிழகத்தில் வலுக்கட்டாயமாக இந்தியை திணிக்கும் முயற்சியை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும். பிற மாநிலங்கள் ஏற்கிறது என்பதற்காக, நாங்களும் இந்தியை ஏற்க வேண்டும் என்பது அவசியமில்லை. தமிழகத்தில் என்னை மீறி இந்தியை திணித்துக் காட்டுங்கள் பார்ப்போம். பாஜகவுடன் சேர்ந்து, தமிழ் மொழியை அழித்ததில் திராவிடக் கட்சிகளுக்கும் பங்குண்டு.
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடுகின்றனர். தேர்தல் வரும் நேரத்தில் முதல்வர் மருந்தகம் என்பது, மக்களிடம் வாக்குகளை பெறுவதற்கான திட்டமாகும். நோய் வந்த பிறகு மருந்து கொடுப்பதைவிட, தூய காற்று, குடிநீர் மற்றும் நஞ்சில்லா உணவை கொடுக்கும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். பெரியார் குறித்து நான் அவதூறாக பேசவில்லை. அவர் பேசியதையே எடுத்துக் கூறினேன். வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டோம். இவ்வாறு சீமான் கூறினார்.