Published : 26 Feb 2025 06:58 AM
Last Updated : 26 Feb 2025 06:58 AM
சென்னை: கேரளாவில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை (பிப். 27) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி பா.கீதா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு கேரளா மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், இதே மாவட்டங்களில் சில இடங்களில் வரும் மார்ச் 1-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 35.6-37.4 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கும். நாளை முதல் வரும் 1-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறையக்கூடும். சென்னை மற்
றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 89.6-91.4 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 73.4-75.2 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கும்.
தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை இன்றும், நாளையும் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT