Published : 26 Feb 2025 06:19 AM
Last Updated : 26 Feb 2025 06:19 AM
சென்னை: நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக வரும் மார்ச் 5-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க அழைப்புவிடுத்து 40 கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
2025-26-ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் வரும் மார்ச் 24-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி வேளாண் பட்ஜெட் மற்றும் துறைகள் தோறும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும் நடைபெற உள்ளது. இதற்கு சட்டப்பேரவை செயலகம் தயாராகி வரும் நிலையில், நேற்று பட்ஜெட் ஒதுக்கீடுகள், புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. காலை 11.45 மணிக்கு தொடங்கிய அமைச்சரவைக் கூட்டம் 12.30 மணிக்கு முடிவுற்றது.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், நிதிநிலை அறிக்கை தொடர்பாக பல்வேறு கருத்துகளை துறைகளின் அமைச்சர்கள், அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதவிர ஒரு முக்கியமான முடிவு எடுத்துள்ளோம். தமிழகம் இன்று மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே, வரும் மார்ச் 5-ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தப்படுகிறது. தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்ற 40 கட்சிகளை அழைக்க முடிவெடுத்து அவர்களுக்கு கடிதம் அனுப்ப உள்ளோம்.
தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்திய மாநிலங்களின் மீது கத்தி தொங்குகிறது. அனைத்து வளர்ச்சிக் குறியீடுகளிலும் முதன்மை மாநிலமாக திகழும் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் தற்போது 39 மக்களவை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளை குறைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு வரும் 2026-ல் மக்களவை தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய உள்ளது.
பொதுவாக, இது மக்கள் தொகை அடிப்படையில்தான் மேற்கொள்ளப்படுகிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது என்பது இந்தியாவின் மிக முக்கியமான இலக்கு. அந்த இலக்கை பொறுத்தவரை தமிழகம் வெற்றி பெற்றுள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. பல ஆண்டுகளாக வெற்றிகரமான குடும்ப கட்டுப்பாடு, பெண்கள் கல்வி மற்றும் சுகாதார முன்முயற்சிகள் மூலம் இதை சாதித்துள்ளோம். மக்கள் தொகை குறைவாக இருக்கும் காரணத்தினாலேயே நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை பிரித்தால், தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் 8 தொகுதிகளை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் 39 உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள், 31 உறுப்பினர்கள் தான் இருப்பார்கள். இன்னொரு முறையில் நாட்டில் உள்ள ஒட்டுமொத்த எம்.பி.க்கள் எண் ணிக்கையை உயர்த்தி, அதற்கேற்ப பிரித்தாலும் நமக்கு இழப்பு தான் ஏற்படும். நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்துவிடும். அதிக மக்கள் தொகை உள்ள மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும். இதனால், தமிழகத்தின் குரல் நசுக்கப்படும். இது உறுப்பினர்கள் எண்ணிக்கை மட்டுமல்ல மாநிலத்தின் உரிமையை சார்ந்தது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. தமிழகம் எதிர்கொள்ள உள்ள இந்த முக்கியமான பிரச்சினையில், தமிழத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களை ஒன்றிணைக்க முதல் கட்டமாக இக்
கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம். அனைத்து கட்சிகளும் கட்சி, அரசியலை கடந்து இந்த விவாதத்தில் பங்கேற்று கருத்துகளை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:
அனைத்து கட்சி கூட்டத்தில் மும்மொழிக் கொள்கை குறித்து விவாதிக்கப்படுமா?
மும்மொழிக் கொள்கை மட்டுமல்ல, நீட் பிரச்சினை, மாநில அரசுக்கு தரவேண்டிய நிதி தொடர்பான பிரச்சினை உள்ளிட்ட எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டுமானால், நமது எம்.பி.க்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். அப்போது தான் குரல் கொடுக்க முடியும். எனவே, அதுதான் முக்கியமாக விவாதிக்கப்படும்.
மொழிக்கொள்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக நீங்கள் தொடர்ந்து கடிதம் எழுதுகிறீர்கள், அரசியல் கட்சிகளும் போராட்டங்களை நடத்துகின்றன. மத்திய அரசிடம் இருந்து ஏதேனும் பதில் கிடைத்துள்ளதா?
ஒரு பதிலும் கிடைக்கவில்லை. அமைதியாகத்தான் இருக்கின்றனர்.
அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளீர்கள். தொடர்ந்து நீங்கள் முயற்சி எடுத்தும் தொய்வு காணப்படுகிறதே. ஒற்றுமையில்லாத சூழல் இருக்கும் நிலையில், அதிமுகவிடம் இதுகுறித்து வலியுறுத்துவீர்களா?
இந்த விஷயத்தில் அவர்கள் குரல் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கையை ஏற்க மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. 1965-ம் ஆண்டுபோல் மீண்டும் ஒரு மொழிப்போருக்கு மத்திய அரசு வித்திடுகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
நிச்சயமாக வித்திடுகிறது, நாங்கள் அதற்கு தயாராக உள்ளோம்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.
முதல்வர் கடிதம்: இந்நிலையில், அனைத்து கட்சி கூட்டம் தொடர்பாக கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தற்போதைய தொகுதிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில்கூட பல்வேறு நியாயமான கோரிக்கைகளை தமிழகம் பெற முடியவில்லை. இந்நிலையில் தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை மேலும் குறைக் கப்பட்டால் தமிழகத்தின் குரல்வளை முழுமையாக நசுக்கப்படும். இது மட்டுமின்றி, தமிழகத்தின் நலன் சார்ந்த பல்வேறு கொள்கை முடிவிலும், மத்திய அரசின் நடவடிக்கைகள் நமது உரிமையைப் பறிப்பதாகவே அமைந்துள்ளன. இந்த கடுமையான விளைவுகளை கருத்தில் கொண்டு, மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு முறை, நமது மாநிலத்தை பாதிக்காத வகையில் செயல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டிய காலமிது. இந்த கூட்டு முயற்சிக்கு உங்கள் ஒத்துழைப்பை கோருகிறேன். நாம் அனைவரும் ஒன்றாக கலந்தாலோசித்து மாநிலத்தின் நலன் காப்பதற்கான ஒருமித்த கருத்துகளின் அடிப்படையில் தகுந்த உத்திகளை தீட்டிச் செயல்படுத்த அழைப்பு விடுக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு மூலம் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரள மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறைகிறது. அதே நேரம், வட மாநிலங்களில் தொகுத எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்நிலையில், கடந்தாண்டு பிப். 13-ல்
சட்டப்பேரவையில், முதல்வர் ஸ்டாலின் ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்டி 2 தீர்மானங்களை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT