Last Updated : 24 Feb, 2025 04:08 PM

 

Published : 24 Feb 2025 04:08 PM
Last Updated : 24 Feb 2025 04:08 PM

பொதுத் தேர்வு காலத்தில் மின்தடை கூடாது: பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவு

சென்னை: மாணவர்கள் அரசு பொதுத் தேர்வு எழுதுவதை முன்னிட்டு, அடுத்த 2 மாதங்களுக்கு மின்தடை செய்யக் கூடாது என பொறியாளர்களுக்கு, மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மின்னுற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, தமிழக மின்வாரியம் வீடுகள், கடைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின்கம்பம், கேபிள், மின்விநியோக பெட்டி, மின்மாற்றி உள்ளிட்ட சாதனங்கள் உதவியுடன் விநியோகம் செய்கிறது. இவற்றில் 24 மணி நேரமும் மின்சாரம் செல்வதால் எப்போதும் வெப்பத்துடன் இருக்கும். எனவே, மின்சாதனங்களின் பழுது ஏற்படுவதை தடுக்க, குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

இப்பணி நடைபெறும் பகுதிகளில் உள்ள வீடு, கடைகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும். இந்த விவரத்தை மின்வாரியம் முன்கூட்டியே நுகர்வோருக்கு செல்போன் மூலம் குறுஞ்செய்தியாகவும், டிவி, நாளிதழ்களில் செய்தியாகவும் வெளியிடும். இந்நிலையில், தற்போது 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து மற்ற வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகளும், கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளும் தொடங்கப்பட உள்ளன.

எனவே, தேர்வு சமயத்தில் மின்தடை ஏற்படுவதைத் தவிரக்கும் வகையில், வரும் ஏப்ரல் மாதம் வரை மின்சாதன பராமரிப்பு பணிகளுக்கு மின்வாரியம் தடை விதித்துள்ளது. மேலும், அடுத்த இரு மாதங்களுக்கு பகலில் மின்தடை செய்யக் கூடாது. மிகவும் அவசிய தேவை என்றால், தலைமைப் பொறியாளர்களிடம் முன்கூட்டியே அனுமதி பெற்று பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என பொறியாளர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x