இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேசுவரத்தில் வேலை நிறுத்தம்

இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேசுவரத்தில் வேலை நிறுத்தம்
Updated on
1 min read

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை துவங்கினர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற சேசுராஜா, வியாகுலம், ஜெயபிரகாஷ், ஆரோக்ய மண்ட்ரோ, கோபால் ஆகியோருக்குச் சொந்தமான ஐந்து விசைப்படகுகளை ஞாயிற்றுக்கிழமை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து படகுகளிலிருந்த 32 மீனவர்களை கைது செய்தனர்.

32 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் தடுத்து நிறுத்தி படகுகளையும் மீட்டுத் தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை திங்கட்கிழமை ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் துவங்கினர்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால் ராமேசுவரத்தில் கடலுக்குச் செல்லாமல் மீன்பிடி இறங்குதளத்தில் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று நங்கூரமிடப்பட்டிருந்தது. மேலும் 3,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கும் செல்லவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in