Published : 24 Feb 2025 05:54 AM
Last Updated : 24 Feb 2025 05:54 AM
சென்னை/ ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க தூதரக முயற்சிகளை மேற்கொள்ளுமாறு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 450 விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு சென்றனர். நேற்று அதிகாலை மன்னார் கடல் பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், எல்லை தாண்டியதாக கூறி 5 படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். 32 மீனவர்களை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது சமீபகாலத்தில் அதிகரித்துள்ளது. இதை தடுக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று நான் பலமுறை கேட்டுக்கொண்ட போதிலும். கைது நடவடிக்கைகள் அதிக அளவில் தொடர்கின்றன. கடந்த 2 மாதங்களில் மட்டும் 119 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டு, 16 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கூட்டு பணிக் குழுவை உடனே கூட்ட வேண்டும். மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க வும். இலங்கையில் இருந்து படகுகளுடன் மீனவர்களை விரைவில் விடுவிக்கவும் வலுவான தூதரக முயற்சி எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT