Published : 21 Feb 2025 09:58 PM
Last Updated : 21 Feb 2025 09:58 PM
மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை வைத்து மத மோதலை உருவாக்கும் செயல்களை மக்கள் முறியடிக்க வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் கேட்டுக்கொண்டுள்ளார்.
‘மதுரையில் மத நல்லிணக்க வழக்கறிஞர்கள் சார்பில் திருப்பரங்குன்றம் தீர்ப்புகள் சொல்வதென்ன? வரலாற்று உண்மை என்ன?’ என்ற தலைப்பில் இன்று கருத்தரங்கு நடைபெற்றது. இதில் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி டி.அரிபரந்தாமன், தொல்லியல் ஆய்வாளர் சொ.சாந்தலிங்கம், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆகியோர் பேசினர்.
முன்னதாக, ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரை திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக மதுரை சார்பு நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் 1917-ல் தொடர்ந்த வழக்கில் 1923-ல் தீர்ப்ப அளிக்கப்பட்டது. அப்போதைய பிரிட்டிஷ் அரசு, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கோயில் தவிர்த்து மீதி அனைத்தும் கிரிவீதி, மரங்கள், கோயில் தவிர்த்து மலையில் உள்ள இடங்கள் அரசுக்கு சொந்தமானது என அறிவித்திருந்தது. திருப்பரங்குன்றம் மலையில் இரு முறை குவாரி நடத்த பிரிட்டிஷ் அரசு முயன்றது. இதை திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் தடுத்து நிறுத்தியது.
மலையின் ஒரு பகுதியில் பள்ளிவாசல், அதன் கீழ் நெல்லித் தோப்பு உள்ளது. பள்ளிவாசல் இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது என கோயில் நிர்வாகமே ஒத்துக்கொண்டுள்ளது. நெல்லித்தோப்பில் புதிய மண்டபம் கட்டுவதற்கு கோயில் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது தான் வழக்கு.
சார்பு நீதிமன்றத்தின் 43 பக்க உத்தரவில், திருப்பரங்குன்றம் மலையில் இரு பகுதி உள்ளது. ஒரு பகுதியில் உயரமான மலையின் உச்சியில் உள்ள பள்ளிவாசல், கொடி கம்பம், பாதை, நெல்லித்தோப்பு ஆகியன பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு சொந்தமானது என நீதிபதி ராம அய்யர் கூறியுள்ளார்.
சார்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உயர் நீதிமன்றம், மலை முழுவதும் அரசுக்கு சொந்தமானது என உத்தரவிட்டு சார்பு நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தது. அப்போது உச்ச நீதிமன்றம் இல்லாததால் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பிரிட்டீஷ் கவுன்சிலில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பிரிட்டிஷ் கவுன்சிலில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து சார்பு நீதிமன்ற தீர்ப்பை 1931-ல் உறுதி செய்து உத்தரவிட்டது.
சார்பு நீதிமன்ற தீர்ப்பில் வரி விதிக்கப்பட்ட நிலங்கள், நெல்லித்தோப்பு, அதிலுள்ள மண்டபம், நெல்லித்தோப்பில் இருந்து பள்ளிவாசலுக்கு செல்லும் பாதை, கொடி கம்பம் தவிர்த்து திருப்பரங்குன்றம் மலையும், கிரிவீதியும் கோயிலுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் இரு பாகங்கள் உள்ளது. அதில் ஒரு பாகம் உயரமான மலை. அதில் தான் பள்ளிவாசல் உள்ளது. அடிவாரத்தில் முருகன் கோயில், இடைப்பட்ட பகுதியில் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதி ஸ்கந்தர் மலையாகவும், இன்னொரு பகுதி சிக்கந்தர் மலையாகவும் உள்ளது.
தீர்ப்பில் மலை உச்சியில் உள்ள பள்ளி வாசலுக்கு, அரசு மானியம் பதிவேட்டில் 1815-ம் ஆண்டில் அறிக்கையில் தணக்கன்குளம் கிராமத்தை பள்ளிவாசலுக்கு செலவு செய்வதற்காக மானியமாக வழங்கியதாக கூறப்பட்டுள்ளது. இதனால் 1815-க்கு முன்பே பள்ளிவாசல் அங்கு உள்ளது என்பது தெரிகிறது.
திருப்பரங்குன்றம், மதுரையில் இருக்கும் இந்துக்களுக்கோ, இஸ்லாமியர்களுக்கோ எந்தப் பிரச்சினையும் இல்லை. வெளியில் இருந்து வருபவர்கள் இதை அரசியல் பிரச்சினையாக்கி வருகிறது. இது நமது சகோதரத்துவம் மற்றும் மத நல்லிணக்கத்தை பாதிக்கும். இந்தியாவை வல்லரசாக ஆக்கும் கனவுக்கு விரோதமானது.
இந்தியாவில் 1991-ல் வழிபாட்டு தலங்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்தச் சட்டத்தில், 1947-ல் சுதந்திரம் பெற்ற போது எந்தெந்த வழிபாட்டு தலங்கள் யார், யார் கட்டுப்பாட்டில் இருந்ததோ, அவர்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அருகே ஆடு, கோழி வெட்டுவது தவறு. ஆடு, கோழி வெட்டுவது அவரவர் விருப்பம். உணவு இறைவனுக்கு படைப்பது என்பது அவரவர் விருப்பம். காது குத்தும் போது, மொட்டை போடும் போது கிடா வெட்டுகிறார்கள். சாமிக்கு தான் வெட்டுகிறார்கள். அசாம் கவுகாத்தி காமாக்கியா கோயிலில் எருமை மாட்டின் தலையை வெட்டி சாமிக்கு படைக்கின்றனர். அங்கு பாஜக அரசு தான் நடைபெறுகிறது. இதை நிறுத்தினால் இங்கும் நிறுத்தலாம்.
மீண்டும் ஒரு மத மோதலுக்கு வழியாக பிரச்சினை செய்கின்றனர். காசி, மதுரா, சாம்பல் பள்ளத்தாக்கு, அஜ்மீர் உட்பட பத்துக்கு மேற்பட்ட இடங்களில் இதுபோன்ற பிரச்சினை செய்கின்றனர். இவற்றுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இப்பிரச்சினை நியாயமற்ற செயல், சட்டத்துக்கு புறம்பானது. இதில் கவனமாக இருக்க வேண்டும். இதை முறியடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT