Published : 11 Jul 2018 07:07 AM
Last Updated : 11 Jul 2018 07:07 AM

இலங்கை அகதிகள் 4,000 பேரை திருப்பி அனுப்ப நடவடிக்கை: சுப்பிரமணியன் சுவாமி தகவல்

தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் 4,000 பேரை மீண்டும் தங்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 1983-ம் ஆண்டு உள்நாட்டு போர் தொடங்கியது. அப்போது அந்நாட்டு ராணுவம் மற்றும் சிங்களர்களால் தமிழர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர். இதனால் இலங்கையில் இருந்து அகதிகளாக உலகம் முழுவதும் தமிழ் மக்கள் இடம்பெயரத் தொடங்கினர். இவர்களுக்காக தமிழகத்தில் 245 முகாம்கள் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தின் 24 மாவட்டங்களில் உள்ள 107 முகாம்களில் 61 ஆயிரத்து 422 அகதிகள் வசிக்கின்றனர். மேலும் 35 ஆயிரத்து 316 அகதிகள் முகாம்களுக்கு வெளியே காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இலங்கை அகதிகள் தொடர்பான அறிக்கையை கடந்த 6-ம் தேதி தாக்கல் செய்து பேசியபோது, 2015-ம் ஆண்டு முதல் தற்போது வரை 3 ஆயிரம் பேர் இலங்கைக்கு திரும்ப அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரி வித்தார்.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வெளிவிவகாரத் துறை அமைச்சகத்துக்கு நான் எழுதிய கடிதத்துக்கு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நடவடிக்கை எடுத்துள் ளார். இதன்பேரில் முதற்கட்டமாக 4,000 இலங்கை தமிழர்கள் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இது குறித்து இலங்கை அரசுக்கு, மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாடு திரும்பும் இலங்கை தமிழர்களை மீள்குடியேற்ற இலங்கை அரசும் நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x