Published : 17 Feb 2025 06:21 PM
Last Updated : 17 Feb 2025 06:21 PM
சென்னை: கோடைகால மின் தேவையை சமாளிக்க, 8,525 மெகாவாட் மின்சாரத்தை குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்ய மின்வாரியத்துக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் மின்தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 2022 ஏப்.29-ம் தேதி அதிகபட்ச மின்தேவை 17,563 மெகாவாட்டாக இருந்தது. பின்னர் , படிப்படியாக அதிகரித்து 2023 ஏப்.20-ம் தேதியன்று தினசரி மின்தேவை 19,387 மெகாவாட்டாக உயர்ந்தது. பின்னர், மீண்டும் மின் தேவை அதிகரித்தது. கடந்த ஆண்டு மே 2-ம் தேதி தினசரி மின்தேவை 20,830 மெகாவாட்டாக அதிகரித்தது. இதுதான் இதுநாள் வரையிலான உச்சபட்ச மின்தேவையாக உள்ளது. இதேபோல், தினசரி மின்நுகர்வு கடந்த ஆண்டு ஏப்.30ம் தேதியன்று 45.4 கோடி மில்லியன் யூனிட்டாக அதிகரித்து உச்சபட்ச மின்நுகர்வாக இருந்து வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு கோடைகாலத்தில் மின் தேவை மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அப்போது, பாதிப்பின்றி மக்களுக்கு மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, கோடைகால மின்தேவையை சமாளிக்க மின்வாரியம் தனது சொந்த உற்பத்தியை தவிர, மத்திய தொகுப்பில் இருந்தும், வெளிச் சந்தையிலும் இருந்தும் மின்சாரத்தை வாங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வெளிச் சந்தையில் இருந்து மின்சாரம் வாங்க அனுமதி கோரி, மின்வாரியம் தரப்பில், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரி இருந்தது.
கோரிக்கையை பரிசீலனை செய்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், வரும் கோடை கால மின் தேவையை சமாளிக்க 8,525 மெகாவாட் மின்சாரத்தை குறுகியகால ஒப்பந்த அடிப்படையில் வாங்கிக் கொள்வதற்கு மின்வாரியத்துக்கு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, பிப்ரவரி முதல் மே மாதம் வரையில் நள்ளிரவு 12 மணி முதல் மாலை 6 வரையிலான மின் தேவையை சமாளிக்க 2,750 மெகாவாட் மின்சாரம் வாங்கவும், மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 5,775 மெகாவாட் மின்சாரம் வாங்கவும் மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT