Published : 16 Feb 2025 10:22 AM
Last Updated : 16 Feb 2025 10:22 AM
சென்னை: அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள், அனைத்து தொகுதிகளிலும் பிப்.25 முதல் மார்ச் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் முதல்வர் 77-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வரும் பிப்.25-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை 5 நாட்கள், `77-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்' கட்சிரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும், பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.
பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வரும் மார்ச் 1-ம் தேதி தேனியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நான் பங்கேற்று உரையாற்றுகிறேன்.
அவர்களுடன் கட்சி எம்எல்ஏக்களும், கட்சி சார்பு அணிகளின் துணை நிர்வாகிகளும், அவர்கள் சார்ந்த தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள். மாவட்ட செயலாளர்கள், தங்கள் மாவட்டத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்டங்களை கட்சி சார்பு அணிகளின் நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள், இந்நாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளுடனும் இணைந்து, சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT