Last Updated : 15 Feb, 2025 07:57 AM

1  

Published : 15 Feb 2025 07:57 AM
Last Updated : 15 Feb 2025 07:57 AM

அண்ணாவை கண்டுகொள்ளாத அண்ணாதுரை! - பதவி பறிப்பின் பின்னணி தகவல்கள்

பட்டுக்கோட்டை தொகுதியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த தேர்தலில் உதயசூரியன் வெற்றி பெற்றது. எம்எல்ஏ-வாக தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கா.அண்ணாதுரை அதிகாரத்துக்கு வந்தார். வராது வந்த மாமணியாய் தொகுதியில் உதயசூரியன் உதித்ததால் உடன்பிறப்புகள் உற்சாகமானார்கள்.

ஆனால், அந்த உற்சாகம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. அனை​வரையும் அரவணைத்துச் செல்லும் பாங்கை கைவிட்​டதால் அண்ணாதுரை எம்எல்​ஏ-வாக பொறுப்​பேற்ற நாள் முதலே அவருக்கு எதிராக கழகத்​துக்​குள்ளேயே கலகக் குரல்கள் வெடித்தன.

ஆனால், அதைப்​பற்றி எல்லாம் கவலைப்​ப​டாமல் தனக்கென ஒரு தனி கோஷ்டியை உருவாக்கிக் கொண்டார் அண்ணாதுரை. இந்த நிலையில் தான், தற்போது அவரை மாவட்டச் செயலாளர் பொறுப்​பிலிருந்து நீக்கிய திமுக தலைமை, ஒன்றிய துணைத் தலைவரான பழனிவேலை அந்தப் பொறுப்பில் அமர்த்தி இருக்​கிறது.

அண்ணாதுரை நீக்கம் குறித்து பட்டுக்​கோட்டை திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது அத்தனை பேருமே குமுறித் தீர்த்​தனர். “பட்டுக்​கோட்டை, பேராவூரணி சட்டமன்றத் தொகு​திகள் தஞ்சை தெற்கு மாவட்​டத்​துக்குள் வருகின்றன. மாவட்​டத்​துக்கு கட்சி அலுவலகம் இருக்​கிறது. ஆனால், அதைத் தவிர்த்து​விட்டு தனக்காக ஒரு கட்சி அலுவல​கத்தை திறந்து கொண்டார் அண்ணாதுரை. இதனால் எந்த அலுவல​கத்​துக்குப் போவது என்று தெரியாமல் கட்சி​யினர் குழம்பிப் போனார்கள்.

பழனிவேல்

அதிராம்​பட்​டினம் பகுதியில் தனக்கு வேண்டிய​வர்​களுக்கு மட்டுமே அண்ணாதுரை கட்சிப் பதவிகளை வழங்கி​னார். இதனால் அங்குள்ள பெரும்​பாலான திமுக-​வினரின் எதிர்ப்​புக்கு ஆளானார். அந்த ஊருக்​குள்ளேயே அவரால் செல்ல​முடிய​வில்லை, மக்களவைத் தேர்தலின் போது, “அண்ணாதுரை எங்கள் பகுதிக்கு பிரச்​சா​ரத்​துக்கு வந்தால் நாங்கள் திமுக-வுக்கு எதிராக வாக்களிப்​போம்” என செயல்​வீரர்கள் கூட்டத்தில் பகிங்​கர​மாகவே திமுக-​வினர் பேசினார். இதனால் அவர் அந்த பகுதிக்குச் செல்லாமல் தவிர்த்​தார்.

அங்கு அண்ணா துரையை கண்டித்து திமுக-​வினர் உண்ணா​விரதப் போராட்டம் நடத்த சுவரொட்​டிகள் எல்லாம் ஒட்டினர். கட்சியில் உள்ள மற்றவர்கள் தலையிட்டுப் பேசியதால் அந்தப் போராட்டம் கைவிடப்​பட்டது. கடந்த இரண்டு ஆண்டு​களுக்கு முன்பு, ஏரியில் திமுக-​வினர் மண் எடுத்த விவகாரத்​தில், தாசில்தார் மற்றும் டிஎஸ்​பி-யை அண்ணாதுரை போனில் மிரட்டிய ஆடியோ வெளியாகி பெரும் பிரச்​சினை​யானது.

பட்டுக்​கோட்​டையில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்​படு​கிறது. நகருக்கு வெளியே போக்கு​வரத்​துக்கு போதிய பாதை வசதி இல்லாத இடத்தில் இந்தப் பேருந்து நிலையத்தை கட்டவைத்ததே அண்ணாதுரை​தான். ஏனென்றால் அந்தப் பகுதியில் அவருக்கு சொந்தமான இடங்கள் நிறைய உள்ளன. அவற்றின் மதிப்பை உயர்த்த இப்படி நடந்து​கொண்​டவர், பேருந்து நிலைய கட்டு​மானப் பணிகளை பாஜககாரர் ஒருவருக்கு ஒதுக்​கவும் காரணமாக இருந்தார் இது எல்லா​வற்றுக்கும் மேலாக, பிப்ரவரி 3-ம் தேதி அண்ணா நினைவு தினம் அனுசரிக்​கப்​பட்டது.

திமுக மாவட்டச் செயலா​ளர்கள் மாவட்டத் தலைநகரங்​களி்ல் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆனால், பட்டுக்​கோட்​டையில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவிக்கச் செல்லாத அண்ணாதுரை, தனது கட்சி அலுவல​கத்தில் அண்ணாவின் புகைப்​படத்​துக்கு மாலை அணிவித்​தார். இவரது தலைமையில் அண்ணாசிலைக்கு மாலை அணிவிக்க காத்திருந்த பலரும் இதனால் கடும் அதிருப்தி அடைந்​தனர். இந்த விவகாரத்தை அப்போதே கட்சி தலைமைக்கு தெரியப்​படுத்​தினர்.

இத்தனை சிக்கல்​களுக்கு மத்தியில் அண்ணாதுரையை மாவட்டச் செயலாளர் பொறுப்பில் வைத்துக் கொண்டு தேர்தலை எதிர்​கொள்வது சிரமம் என்பதாலேயே தலைமை அவரை பொறுப்பில் இருந்து தூக்கி இருக்​கிறது. எங்களைக் கேட்டால் இதுவே லேட் தான்” என்றனர் பட்டுக்கோட்டை திமுக-வினர். இதற்கெல்லாம் அண்ணாதுரை என்ன பதில் சொல்கிறார் என்று கேட்க அவரது அலைபேசி எண்ணுக்கு பலமுறை தொடர்பு கொண்டோம். அது தொடர்பு எல்​லைக்கு வெளி​யிலேயே இருந்தது!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x