பெற்றோரை கொண்டாடுவோம் மாநாட்டுக்கு வருமாறு கட்டாயப்படுத்தி அலைக்கழிப்பதா? - ராமதாஸ் கண்டனம்

பெற்றோரை கொண்டாடுவோம் மாநாட்டுக்கு வருமாறு கட்டாயப்படுத்தி அலைக்கழிப்பதா? - ராமதாஸ் கண்டனம்
Updated on
1 min read

விருத்தாசலத்தில் வரும் 22-ம் தேதி நடத்தப்படவுள்ள பெற்றோரை கொண்டாடுவோம் மாநாட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த திருப்பெயர் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்றில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள பெற்றோரை கொண்டாடுவோம் என்ற பெயரிலான மாநாட்டுக்காக கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த பெற்றோரை அழைத்து வர வேண்டும் என்று அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அரசு அதன் விளம்பரத்துக்காக பெற்றோரையும், ஆசிரியர்களையும் அலைக்கழிப்பது கண்டிக்கத்தக்கது. அதேபோல், தனியார் பள்ளிகளில் இருந்து குறைந்தது 20 பெற்றோரை அழைத்து வர வேண்டும் என்றும் வாய்மொழியாக ஆணையிடப்பட்டுள்ளது.

இதன்படி 7 மாவட்டங்களைச் சேர்ந்த பெற்றோரை விருத்தாசலத்துக்கு அழைத்து வருவது மனித உரிமை மீறல் ஆகும். மாநாட்டுக்கு காலை 7 மணிக்கு விருத்தாசலம் செல்ல வேண்டும் என்றால் குறைந்தது அதிகாலை 3 மணிக்கு பெற்றோர் புறப்பட வேண்டும். இந்த கொடுமைகளை பெற்றோர் விரும்பாத நிலையில் அவர்களை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்வது நியாயமல்ல. இந்த மாநாடு நடத்துவதன் பின்னணியில் புனிதமான நோக்கங்கள் எதுவும் இல்லை. தேர்தல் பிரச்சாரத்துக்கான வாய்ப்பாகவே திமுக பயன்படுத்தி கொள்ளப்பார்க்கிறது. அதற்காக ஆசிரியர்களையும், பெற்றோரையும் அலைக்கழிப்பது சரியல்ல.

எனவே, விருத்தாசலத்தில் வரும் 22-ம் தேதி நடத்தப்படவுள்ள பெற்றோரை கொண்டாடுவோம் மாநாட்டை ரத்து செய்ய வேண்டும். அதற்கு பதிலாக வட்ட அளவில் இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொள்ள அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in