Published : 13 Feb 2025 01:11 PM
Last Updated : 13 Feb 2025 01:11 PM
சென்னை: தமிழகம் முழுவதும் பள்ளி மாணவிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே உள்ள அரசுப் பள்ளியில், கடந்த ஜனவரி மாதம் 22 அன்று, ஏழாம் வகுப்பு மாணவி, அந்தப் பள்ளி மாணவர்களாலேயே பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து வெளியில் தெரியாமல் இருக்க, அந்தப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக இருக்கும், திமுகவைச் சேர்ந்த ஜோதி என்ற நபர், கடந்த 20 நாட்களாக, காவல்துறையில் புகார் அளிக்காமல் தடுத்து, கட்டப்பஞ்சாயத்து செய்து வந்திருக்கிறார்.
வேறு வழியின்றி, மாணவியின் பெற்றோர்கள், குழந்தைகளுக்கான உதவி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்த பிறகே, காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்கள், காவல்துறையில் புகார் அளிப்பதைத் தடுத்து தாமதப்படுத்திய திமுகவைச் சேர்ந்த ஜோதி என்ற நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தமிழகம் முழுவதுமே, பள்ளி மாணவிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. முற்றிலும் பாதுகாப்பற்ற சூழலில் பள்ளிகள் இருக்கின்றன. இதனைத் தடுக்கவோ, பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவோ எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
நாளைய தலைமுறையை உருவாக்கும் தமிழகப் பள்ளிகள், மிகுந்த பரிதாபத்திற்குரியதாக இருக்கின்றன. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எப்போதுதான் தனது துறை தொடர்பான பணிகளை மேற்கொள்வார்?” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT