

சென்னை: பாலியல் வழக்கில் கைதாகியுள்ள அமெரிக்க குடியுரிமை பெற்ற தனியார் மென்பொருள் நிறுவன தலைமை செயல் அதிகாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரியும் சக்திவேல் என்பவர், அங்கு பணியாற்றிய இளம்பெண்ணுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வு தருவதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் ரீதியாக அத்துமீறியதால், பாதிக்கப்பட்ட அந்த பெண் பணியில் இருந்து விலகியுள்ளார். இதுதொடர்பாக அந்தப்பெண் அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அதிகாரி சக்திவேல் மீது புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி சக்திவேல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரரான சக்திவேல் தரப்பில், அந்தப் பெண் தன்னிடம் கடன் கேட்டு கொடுக்க மறுத்ததால் தனக்கு எதிராக பொய்யான பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். எனவே தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும், என கோரப்பட்டது.
ஆனால் காவல்துறை தரப்பில், இந்த வழக்கின் விசாரணை ஆரம்பகட்டத்தில் இருப்பதாகவும், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றிய சக்திவேல் மீது மேலும் பல பெண்கள் பாலியல் ரீதியாக புகார் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்பதால் ஜாமீன் வழங்கினால் அங்கு தப்பிச்செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் வாதிடப்பட்டது. அதையடுத்து நீதிபதி, மனுதாரரான சக்திவேலின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.