Published : 11 Feb 2025 05:41 AM
Last Updated : 11 Feb 2025 05:41 AM
சென்னை: மறைந்த அரசு மருத்துவர் லட்சுமி நரசிம்மன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்கியதாக தெரிவித்தது தவறானது. தவறான தகவலுக்கு வருந்துகிறோம் என மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மருத்துவர் ஜெ.சங்குமணி விளக்கம் அளித்துள்ளார்.
அரசு மருத்துவர்களுக்கு நியாயமான ஊதியம் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும் வகையில் அரசாணை 354-ஐ அமல்படுத்தக் கோரி இறுதிவரை போராடியவர் அரசு மருத்துவர் லட்சுமி நரசிம்மன். இவர் கடந்த 2020 பிப்.6-ம் தேதி உயிரிழந்தார். இருப்பினும் இதுவரை அரசாணை அமலாகாததால், ‘மருத்துவர் லட்சுமி நரசிம்மனின் உயிர்த் தியாகத்துக்கு மதிப்பில்லையா?’ என்ற தலைப்பில் அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்குழு தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை எழுதிய கட்டுரை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கடந்த 7-ம் தேதி வெளியானது.
இதற்கு மறுப்பு தெரிவித்து, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மருத்துவர் ஜெ.சங்குமணி வெளியிட்ட அறிக்கையில், “மருத்துவர் சங்கங்களுக்குள் நிலவும் கருத்து வேறுபாடு காரணமாக அரசாணை 354-ஐ அமல்படுத்துவது குறித்து தீர்வு எட்டப்படவில்லை. ஒற்றுமையுடன் ஒருமித்த கருத்தை மருத்துவர் சங்கங்கள் தெரிவித்தால், கோரிக்கையை நிறைவேற்ற அரசு தயாராக உள்ளது.
மறைந்த மருத்துவர் லட்சுமி நரசிம்மன் வாரிசுதாரர்களுக்கு பணி வழங்க அமைச்சர் உத்தரவிட்டும், இதுவரை அவர்கள் ஏற்க முன்வரவில்லை. பணியின்போது உயிரிழந்த லட்சுமி நரசிம்மன் உள்ளிட்ட 6 மருத்துவர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.1 கோடி நிதி, கடந்த ஜன.10-ம் தேதி வழங்கப்பட்டது” என தெரிவித்திருந்தார். இந்த செய்தி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கடந்த 8-ம் தேதி வெளியானது.
இதையடுத்து, கடந்த 9-ம் தேதி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழை தொடர்பு கொண்ட மறைந்த லட்சுமி நரசிம்மனின் மனைவி அனுராதா, “எங்கள் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி கொடுத்ததாகவும், பணி நியமன ஆணை வழங்கியதாகவும் கூறுவது முற்றிலும் உண்மைக்கு மாறானது.
ரூ.1 கோடியும் கொடுக்கவில்லை. பணிநியமன ஆணையும் வழங்கவில்லை. இந்த இரண்டையும் நாங்கள் கோரியதும் இல்லை. உண்மைக்கு மாறான தகவலை தெரிவித்ததற்காக நீதிமன்றம் செல்ல இருக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். இதேபோல் சட்டப் போராட்டக்குழு தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளையும் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், நேற்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மருத்துவர் ஜெ.சங்குமணி வெளியிட்ட அறிக்கையில், “மருத்துவர் லட்சுமி நரசிம்மனின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி கார்ப்பஸ் ஃபண்டில் (Corpus Fund) இருந்து நிதி வழங்கப்பட்டுள்ளது என்பது தவறான தகவல். தவறான தகவலுக்கு வருந்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT