Last Updated : 10 Feb, 2025 04:33 PM

3  

Published : 10 Feb 2025 04:33 PM
Last Updated : 10 Feb 2025 04:33 PM

ஆட்சேபனையற்ற பகுதிகளில் வசிக்கும் 86,000 பேருக்கு பட்டா வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல்

சென்னை: தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரை உள்ளிட்ட சில மாநகராட்சி பகுதிகளில் அடுத்த 6 மாதங்களுக்குள் ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 86,000 பேருக்கு பட்டா வழங்குவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்து, நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் விரைவில் வரும் 2025-26-ம் நிதியாண்டுக்கான பொது மற்றும் வேளாண் பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட உள்ளது. வழக்கமாக பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, பட்ஜெட் ஒதுக்கீடுகள், புதிய திட்டங்களுக்கான ஒப்புதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பெறப்படும். அந்த வகையில், வரும் நிதியாண்டுக்கு தற்போதைய திமுக அரசு 5-வது மற்றும் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இந்த பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில், இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

ஒரு மணி நேரம் நடைபெற்ற விவாதத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியது: “சென்னையை சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் ‘பெல்ட் ஏரியா’ என கூறப்படும் 32 கி.மீ. பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து நீண்ட நெடிய காலமாக குடியிருப்பவர்கள் பட்டா பெற முடியாமல் சிரமப்படுகின்றனர். இது முதல்வரின் கவனத்துக்கு சென்றதன் விளைவாக, அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த மக்களுக்கு பட்டா வழங்க முடிவெடுத்துள்ளார்.

இதில் சென்னையில் மட்டும், ஆட்சேபனையற்ற புறம்போக்கு பகுதிகளில் 29,187 பேர் பட்டா இல்லாமல் குடியிருக்கின்றனர். அவர்களுக்கு பட்டா வழங்கும் பணிகளை 6 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளார். இந்த பெல்ட் ஏரியா சட்டம் 1962-ம் ஆண்டு வந்தது. 1962-லிருந்து 2025 வரை அதன் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுக்காமல் இருந்தது. இவர்களுக்கு 6 மாதத்துக்குள் பட்டா வழங்க உத்தரவிட்டதுடன், மாவட்ட அளவில் ஒரு குழுவும், சென்னையில் மாநில அளவில் ஒரு குழுவும் அமைத்து உடனடியாக அந்தப் பணிகளை துவங்கவும் அறிவுறுத்தியுள்ளார். சென்னையை சுற்றியிருக்கக்கூடிய 4 மாவட்ட மக்களுக்கும், மிகப் பெரிய வரப்பிரசாதமாக இது அமையவிருக்கிறது.

மதுரை, திருநெல்வேலி போன்ற மாநகராட்சிகளில் இதே போல பிரச்சனையிருக்கிறது. அங்கே இருப்பவர்களுக்கும் பட்டா வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட தலைநகரில் இருக்கக்கூடிய பகுதிகளுக்கெல்லாம் சேர்ந்து மொத்தம் 57,084 பேர் ஆட்சேபனையற்ற புறம்போக்கு பகுதிகளில் குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்க அறிவறுத்தியுள்ளார். ஏறத்தாழ 86 ஆயிரம் பேருக்கு பட்டாவை 6 மாதங்களுக்குள் வழங்கும்படி கூறியுள்ளார். இவர்கள் தவிர்த்து, இன்னும் விடுபட்டிருந்து மனுக்கள் வரும் என்று சொன்னால், அதையும் பரிசீலனை செய்யுங்கள் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைத்த பின் இதுவரை 10.26 லட்சம் பேருக்கு நாங்கள் பட்டா வழஙகியுள்ளோம். முதல்வர் இன்னும் கொஞ்சம் விரைவுப்படுத்தி, வரும் ஆறு மாதத்துக்குள் 6.29 லட்சம் பேருக்கு பட்டா வழங்குவதற்கான நடவடிக்கையும் எடுத்து வருகிறோம். ஒரு தனி மனிதனுக்கு குடியிருப்பதற்கு இடமோ, வீடோ இல்லாமல் இருக்கக் கூடாது என்ற உணர்வுடன் முதல்வர் ஒவ்வொரு காரியத்தையும் செய்து வருகிறார். இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த பெல்ட் ஏரியாவிற்கு எடுக்கப்பட்ட முடிவு அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய முடிவாக இருக்கும்.

நீர்நிலை புறம்போக்கு, மேய்க்கால் நிலம் போன்ற ஆட்சேபத்துக்குரிய இடங்களில் பட்டா வழங்கப்படாது. நீதிமன்றமே தடை விதித்துள்ளது. அதேநேரம் அரசால் வழங்க முடிவெடுக்கப்பட்ட பகுதிகளில் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படுகிறது. இதுகுறித்து, நாங்களே கணக்கெடுத்துள்ளோம். அங்கு வசிக்கும் மக்களுக்கும் தெரியும். ஒருவேளை விடுபட்டிருக்கும் பட்சத்தில் விண்ணப்பித்தால், அதற்கான குழு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x