

சென்னை: ‘மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் ஏழை, எளிய மக்களுக்கு விரோதமானது. எனவே, அதை நிராகரிக்க வேண்டும்’ என, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா வலியுறுத்தி உள்ளார்.
ஏழை, எளிய, நடுத்தர மக்களை சுரண்டும் மத்திய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில், பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் சென்னை, பாரிமுனையில் நேற்று நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் போராட்டத்துக்கு தலைமை வகித்தார். பட்ஜெட் நகலை எரித்து போராட்டத்தை தொடங்கி வைத்து, கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா பேசியதாவது:
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் ஏழை, எளிய மக்களுக்கு விரோதமானது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. விலைவாசி பன்மடங்கு உயர்ந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. பணவீக்கம் அதிகரித்துள்ளதோடு, ரூபாயின் மதிப்பு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படை பிரச்சினைகளை இப் பட்ஜெட் எந்த வகையிலும் அணுகவில்லை. எனவே, இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் இருந்து ஜிஎஸ்டி வருவாய் அதிகளவில் மத்திய அரசுக்கு செல்கிறது. ஆனால், தமிழக அரசு நிதி கேட்கும்போது அதை தர மத்திய அரசு மறுக்கிறது. அத்துடன், தமிழகத்துக்கு எதிராக பல்வேறு முடிவுகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
இந்த பட்ஜெட் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பெரிய தொழிலதிபர்களுக்கும் சாதகமானது. எனவே, இந்த பட்ஜெட்டை நிராகரிக்க வேண்டும். இந்தியக் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள் இந்த பட்ஜெட்டை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளன.
காப்பீட்டுத் துறையில்கூட இன்றைக்கு 100 சதவீதம் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படுகிறது. அதேபோல், விண்வெளி ஆராய்ச்சித் துறையில் தனியார் பங்களிப்பு அனுமதிக்கப்படுகிறது. இதன்மூலம், அனைத்து துறைகளும் தனியார்மயமாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்கு உயர்த்துவோம் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால், விவசாயிகள் இன்றைக்கு கடன் தொல்லையால் தற்கொலை செய்து வருகின்றனர். விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு சட்டரீதியான குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க வேண்டும் என்று போராடுகிறார்கள். ஆனால், அது கொடுக்கப்படவில்லை.
கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பது மற்றும் நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.
அதேபோல், விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும், பொதுவிநியோக திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றவும் மத்திய அரசு தயாராக இல்லை. இவ்வாறு டி.ராஜா பேசினார்.
இப்போராட்டத்தில், கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.