Published : 08 Feb 2025 09:27 AM
Last Updated : 08 Feb 2025 09:27 AM

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி; நாதக வேட்பாளர் உட்பட 45 பேர் டெபாசிட் இழப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் விசி. சந்திரகுமார் 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 24,151 வாக்குகள் பெற்றார். சீதாலட்சுமி உள்பட 45 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

வெற்றி நிலவரம்: (தபால் வாக்குகள் சேர்த்து)
வி.சி.சந்திரகுமார் (திமுக) -1,15,709 (74.7%)
சீதாலட்சுமி (நாதக) - 24,151 (15.59%)
நோட்டா -6,101 (3.94%)

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வந்தது. முதலில் தபால் வாக்குகளையும், அதனைத் தொடர்ந்து மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி நடந்தது. 17 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், பழுதான மூன்று இயந்திரங்களில் பதிவான வாக்குகள் மூன்று சுற்றுகளாக எண்ணப்பட்டு மொத்தம் 20 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. 20 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் 1,15,709 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 74.7 சதவீத வாக்குகளை அவர் பெற்றார்.

டெபாசிட் இழந்த நாதக: ஈரோடு கிழக்கில் பதிவான, செல்லத்தக்க 1,54,990 வாக்குகளில், 16.7 சதவீதம், அதாவது 25,883 வாக்குகள் பெற்றால் நாம் தமிழர் வேட்பாளர் டெபாசிட் பெற முடியும். இந்நிலையில், 20 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 24,151 வாக்குகளை மட்டுமே பெற்றார். 15.59% வாக்குகளை நாதக வேட்பாளர் பெற்றார்.

அமைதியான வாக்கு எண்ணிக்கை: ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில், இண்டியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மா.கி.சீதாலட்சுமி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் சார்பில் 13 வேட்பாளர்கள் மற்றும் 31 சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 5-ம் தேதி நடந்தது. இத்தேர்தலில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக, 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவில், 74 ஆயிரத்து 260 ஆண்கள், 80 ஆயிரத்து 376 பெண் வாக்காளர்கள், 21 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1 லட்சத்து 54 ஆயிரத்து 657 வாக்காளர்கள் வாக்களித்தனர். வாக்குப்பதிவு சதவீதம் 67.97. இத்துடன், தபால் வாக்குகள், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் என, 246 பேரும், ராணுவத்தில் பணி செய்யும் 4 பேர், சிறையில் உள்ள, ஒருவர் என, 251 வாக்குகள் பதிவானது.

வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான சித்தோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. வாக்கு எண்ணும் மையத்தில் 76 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டதோடு, துணை ராணுவத்தினர் உட்பட 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வாக்கு எண்ணிக்கை அசம்பாவிதங்கள் இன்றி அமைதியாகவே நடந்தது.

தபால் வாக்கு தொட்டே... இந்நிலையில், ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தலைமையில், தேர்தல் பொது பார்வையாளர் அஜய் குமார் குப்தா, எஸ்பி ஜவகர், தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னிலையில் பாதுகாப்பு அறையின் சீல் இன்று (8-ம் தேதி) காலை 8 மணிக்கு திறக்கப்பட்டது.

ஈரோடு கிழக்கில் பதிவான தபால் வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8.30 மணிக்கும் தொடங்கியது. இத்தேர்தலில் பதிவான தபால் வாக்கு விவரங்கள் வெளியாகின. அதில், மொத்தமுள்ள 251 தபால் வாக்குகளில் திமுக வேட்பாளருக்கு 197 வாக்குகள் கிடைத்துள்ளன. இதிலும் 8 பேர் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று நோட்டாவை (NOTA) தேர்வு செய்திருந்தனர்.

தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 14 மேஜைகளில் எண்ணப்பட்டது. தபால் வாக்கு ஒரு மேஜையில் எண்ணப்பட்டது. ஒவ்வொரு மேஜையிலும், ஒரு கண்காணிப்பாளர் உதவியாளர், நுண் பார்வையாளர் என மொத்தம் 51 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 20 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 24,151 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார்.

தேர்தல் வெற்றி குறித்து திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் “இந்த தேர்தல் முடிவுகள் தான் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும்.” என்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி கூறும்போது, “நாம் தமிழர் கட்சிக்கு பின்னடைவு கிடையாது. கடந்த இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தலை விட கூடுதலான வாக்குகளைப் பெற்று வருவதால், இது பின்னடைவு கிடையாது. 2026-ம் ஆண்டு திமுகவுக்கு நிச்சயமாக பின்னடைவு ஏற்படுத்தப்படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x