Published : 08 Feb 2025 06:08 AM
Last Updated : 08 Feb 2025 06:08 AM
சென்னை: பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் ரூ.213 கோடியில் தரை மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை பிப்.28-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காக சிஎம்டிஏ நிதியில் இருந்து ரூ.84.17 கோடி நிதியை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்துக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று வழங்கினர்.
சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் காகர்லா உஷா, சிஎம்டிஏ முதன்மை செயல் அலுவலர் அ.சிவஞானம், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மேலாண்மை இயக்குநர் அரவிந்த், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் ஜெ.சங்குமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: சென்னை கொளத்தூர் பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனை 1986-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மருத்துவமனையில் 860 படுக்கை வசதி உள்ளது. இம்மருத்துவமனைக்கு கூடுதலாக 102 மருத்துவர்கள், 236 செவிலியர்கள், 79 மருத்துவம்சாரா பணியாளர்கள், 20 அமைச்சு பணியாளர்கள், 126 பன்னோக்கு மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் 240 தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 803 பேர் நியமனம் செய்யப்படவுள்ளனர்.
மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை, விபத்து காய சிகிச்சைப் பிரிவு, தொற்றா நோய் பிரிவு, டயாலிசிஸ், ரத்தவங்கி போன்ற சேவைகள் வழங்கும் வகையில், உலக வங்கி திட்டத்தின்கீழ் ரூ.71.81 கோடியில் 3 தளங்களுடன் கூடிய கூடுதல் கட்டிடம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அமைக்கும் பணி கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக மேலும் பல உயர்சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் மற்றும் பிரத்யேக இருதயவியல் சிகிச்சை பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய 6 தளங்களாக விரிவாக்கம் செய்யப்பட்டு ரூ.54.82 கோடியில் கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி முதல்வரால் ஆணையிடப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வரும் 28-ம் தேதி தரை மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையின் புதிய கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் திறந்து வைக்க உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்து அவர் கூறும்போது, “அரசு மருத்துவமனைகளில் செயல்பட்டு வரும் டயாலிசிஸ் சிகிச்சை மையங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்படாது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT