Published : 08 Feb 2025 01:19 AM
Last Updated : 08 Feb 2025 01:19 AM
அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய மனுக்கள் மீது பிப்ரவரி 12-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் பதவி உள்ளிட்ட கட்சி விவகாரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க கூடாது என்று கோரி முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், அதுதொடர்பான மனுக்களை விசாரிக்க கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்துள்ளது.
இதை நீக்க கோரி ஓ.பி.ரவீந்திரநாத், வா.புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன், எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள், நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது நடந்த வாதம்:
பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யமா சுந்தரம்: கட்சி விதிகளில் திருத்தம் செய்தது, புதிய பொதுச் செயலாளரை தேர்வு செய்தது உள்ளிட்ட அதிமுக உள்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட அதிகாரம் இல்லை. உரிமையியல் நீதிமன்றத்துக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது. மேலும், தடையை நீக்க கோரியவர்கள் அதிமுக உறுப்பினர்கள்கூட கிடையாது. அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள். கட்சியில் எந்த பிளவும் இல்லை. பழனிசாமிக்கு கட்சியில் ஏற்கெனவே இருந்த அதே ஆதரவு அப்படியே உள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சூழலில் இரட்டை இலை சின்னத்தை முடக்கினால், கட்சிக்கு பெரும் இழப்பு ஏற்படும். எனவே, தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை மீண்டும் உறுதி செய்ய வேண்டும்.
தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன்: உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே, அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவிக்கும் வகையில் அனைவருக்கும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
நீதிபதிகள்: தேர்தல் ஆணையம் தரப்பு முன்வைத்த வாதத்தை பதிவு செய்து கொண்டு, அதன்படியே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ‘நீதிமன்ற உத்தரவு’ என்று கூறி துஷ்பிரயோகத்தில் ஈடுபட கூடாது. அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக அளித்த மனுக்கள் மீது தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த முடியுமா?
தேர்தல் ஆணையம் தரப்பு: உள்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளின் இறுதி முடிவுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்படும். தற்போது இந்த மனுக்களை விசாரிக்க அதிகாரம் உண்டா, இல்லையா என்பது குறித்து தேர்தல் ஆணையம் இன்னும் முடிவு எடுக்கவில்லை.
ரவீந்திரநாத், புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன் தரப்பு: அதிமுகவின் பெயர், கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதித்திருந்தாலும், கட்சிக்குள் நிலைமை மாறியுள்ளது. பெரும்பாலான உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தவிர, உள்கட்சி பிரச்சினை குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு எல்லா அதிகாரமும் உள்ளது. எனவே, ஆணையத்துக்கு தடை விதிக்க முடியாது. இவ்வாறு வாதம் நடந்தது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய மனுக்கள் மீது பிப்ரவரி 12-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும். தேர்தல் ஆணையம் அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது’’ என்று கூறி விசாரணையை தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT