பனிமூட்டம் காரணமாக கோவையில் விமான சேவை பாதிப்பு

பனிமூட்டம் காரணமாக கோவையில் விமான சேவை பாதிப்பு
Updated on
1 min read

கோவை: பனிமூட்டம் காரணமாக கோவையில் இன்று காலை விமான சேவை பாதிக்கப்பட்டது.

கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர் மற்றும் அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது.

இன்று காலை கோவை விமான நிலைய சுற்றுப்பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவிய காரணத்தால் விமானங்கள் புறப்பாடு மற்றும் தரையிறங்கும் நிகழ்வுகள் பாதிக்கப்பட்டன. மும்பையில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் கோவையில் தரையிறங்க முடியாமல் 20 நிமிடங்களுக்கு மேல் கோவை வான் பகுதியில் வட்டமடித்தபடி இருந்தது. நிலைமை சீரடையாததால் அந்த விமானம் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது.

இதே போல் கோவையில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டன. இச்சம்பவத்தால் குறித்த நேரத்தில் பயணம் மேற்கொள்ள முடியாமல் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in