Published : 06 Feb 2025 06:32 AM
Last Updated : 06 Feb 2025 06:32 AM
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளிலும் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் வரும் ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் மீதான விசாரணை, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி போன்ற சுற்றுலா தலங்கள் அடங்கிய 9 மாவட்டங்களில் மதுபானக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 7 மாவட்டங்களில் பகுதிவாரியாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, காலி மதுபாட்டில்களை திரும்பப்பெற தனியாக டெண்டர் விடப்பட்டு 97 சதவீத பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் தமிழகம் முழுவதும் இத்திட்டம் வரும் ஏப்ரல் முதல் அமல்படுத்தப்பட உள்ளது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், ‘‘மதுபாட்டில்களுக்கு கூடுதலாக வசூலிக்கப்பட்டு, திருப்பி கொடுக்கப்படாத தொகையை தமிழகத்தின் முக்கிய பிரச்சினையாக இருக்கும் நீர்நிலை மேம்பாடு மற்றும் வனப்பகுதி மேம்பாட்டுக்கு பயன்படுத்தும் வகையில் அரசு வழக்கறிஞர்கள் யோசனை தெரிவிக்கலாம்’’ என்றனர்.
மேலும், காலி மதுபாட்டில்கள் திரும்பப்பெறும் நிலையில் மூடியை மாற்றுவதா அல்லது அந்த மூடியையும் திரும்பப்பெற முடியுமா என்பது குறித்து தமிழக அரசும், டாஸ்மாக் நிறுவனமும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஏப்.3-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT