

சென்னை: சென்னையின் வளர்ந்த தொழில்நுட்பங்கள் வடகிழக்கு மாநிலங்களையும் சென்றடைய வேண்டும் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், வடகிழக்கு வர்த்தகம் மற்றும்முதலீடு தொடர்பான மாநாடு, சென்னை கிண்டியில் நேற்று நடைபெற்றது. இதில் அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் முதலீடுகள் செய்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முதலீடுகள் தொடர்பாக எடுத்துரைத்தார்.
அப்போது அவர் பேசியது: பாரம்பரியம் மற்றும் கலாச்சார வளர்ச்சிமிக்க சென்னை நகரம், இந்தியாவை மற்ற நாடுகளுக்கு பிரதிபலிக்கும் இடமாக இருந்து வருகிறது. மேலும், நவீன உலகின் தொழில்நுட்பம் மற்றும் உட்கட்டமைப்புகளை மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாக திகழ்கிறது. சென்னை நகரம், தொழில்நுட்ப துறைகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் வளர்ச்சி, டிஜிட்டல் மாற்றங்களுக்கான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என அனைத்திலும் முன்னிலையில் இருந்து வருகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் செயல்படும் ஐடிநிறுவனங்கள், ரூ.2.5 லட்சம் கோடி வருவாயை நாட்டுக்காக அர்ப்பணிக்கின்றன. இது போன்ற வளர்ச்சியை வடகிழக்கு மாநிலங்களும் பெற வேண்டும். அதற்கு முதலீடுகள் அதிகம் தேவை.
கடந்த 10 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு மத்திய அரசு வடகிழக்கு மாநிலங்களில் முதலீடு செய்துள்ளது. இதனால் ஏற்றுமதி இறக்குமதி போக்குவரத்தும் சிறப்பாக இருக்கிறது.ரூ.18 ஆயிரம் கோடியில் ரயில்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரூ.1.2 லட்சம் கோடிக்கான வர்த்தகமும் நடந்து வருகிறது. எனவே, சென்னையில் முதலீடு செய்வதுபோல் வடகிழக்கு மாநிலங்களிலும் முதலீடு செய்ய வாருங்கள். மற்ற நகரங்களில் இருந்தும் இங்கு முதலீடு செய்தால் இந்த மாநிலங்களும் தொழில்நுட்ப ரீதியாக வளர்ச்சி அடையும்.இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்வில் மிசோரம் மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் புலால்கிங்லோவா ஹ்மர், வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலர் சன்ச்சல் குமார், இணை செயலர் சாந்தனு, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் மாநில கவுன்சில் துணைத் தலைவர் பூபேஷ் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.