

மதுரை: சிலை கடத்தல் வழக்கின் முதல்கட்ட விசாரணை அறிக்கை நகல் கேட்டு ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தாக்கல் செய்த மனுவுக்கு, சிபிஐ பதில் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஓய்வுபெற்ற டிஎஸ்பி காதர்பாட்ஷா, “சிலை கடத்தல் வழக்கின் முக்கியக் குற்றவாளி தீனதயாளனை தப்பவைக்க ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் முயன்றார். இதற்கு இடையூறாக இருந்த என் மீது வழக்கு பதிவு செய்தார். இது தொடர்பாக பொன்.மாணிக்கவேல் மீது புகார் அளித்தேன். இந்தப் புகாரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கஉத்தரவிட வேண்டும்” என்று கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்து, பொன் மாணிக்கவேல் மீதான புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, சிபிஐ முதல்கட்ட விசாரணை நடத்தி, பொன் மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில், தன் மீதான வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 2024 ஆகஸ்ட் மாதம் சிபிஐ தாக்கல் செய்த முதல்கட்ட விசாரணை அறிக்கையின் நகல் கேட்டு, விசாரணை நீதிமன்றத்தில் பொன் மாணிக்கவேல் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், முதல் தகவல் அறிக்கையைத் தவிர்த்து பிற ஆவணங்களை வழங்க முடியாது என்று உத்தரவிட்டது. இதை ரத்து செய்து, சிபிஐ முதல்கட்ட விசாரணை அறிக்கையின் நகல் வழங்க உத்தரவிடக் கோரி பொன் மாணிக்கவேல் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில், “விசாரணை அதிகாரியைத் தொடர்புகொள்ள இயலவில்லை. இதனால் 4 வார காலம்அவகாசம் வழங்க வேண்டும்” எனக் கூறப்பட்டது.
பின்னர் நீதிபதி, ” உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தொடங்கப்பட்டதன் நோக்கமே, வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காணப்பட வேண்டும் என்பதே. தற்போது மின்னஞ்சல், வாட்ஸ்அப் என தொலைத்தொடர்பு சாதனங்களின் பங்கு அதிகரித்துள்ள சூழலில், விசாரணை அதிகாரியைத் தொடர்பு கொள்ள இயலவில்லை என்று கூறி காலஅவகாசம் கோருவதை ஏற்க இயலாது. இது தொடர்பாக சிபிஐ பதில் அளிக்க வேண்டும். விசாரணை பிப். 24-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.