தைப்பூசம், தொடர் விடுமுறை: 1,320 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை

தைப்பூசம், தொடர் விடுமுறை: 1,320 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை
Updated on
1 min read

சென்னை: தைப்பூசம், தொடர் விடுமுறையையொட்டி, 1,320 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாளை (பிப்.7), பிப்.8, 9 தேதிகளில் வார விடுமுறை நாட்கள், முகூர்த்தம் மற்றும் தைப்பூசம் வருவதால் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு பிப்.7,8 தேதிகளில் 910 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 120 பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதாவரத்திலிருந்து 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிறன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்து இயக்கத்தை அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வார இறுதி நாட்களில் பயணிக்க 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in