Published : 05 Feb 2025 09:05 AM
Last Updated : 05 Feb 2025 09:05 AM
2024 மக்களவைத் தேர்தலின் போது, “கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும்” என திமுக வாக்குறுதி அளித்தது. இதற்கான வேலைகள் இப்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில், கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் சர்ச்சையாகி இருக்கிறது.
கோவை ஒண்டிப்புதூரில் திறந்தவெளிச் சிறைச்சாலை இயங்கி வரும் இடத்தில் சுமார் 20.72 ஏக்கரை ஒதுக்கித்தான் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படுகிறது. ஏற்கெனவே சாலை விரிவாக்கம் என்ற பெயரில், கோவையில் ஆயிரக் கணக்கான மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டு விட்டன. இச்சூழலில், நகரின் முக்கிய பசுமைப் பகுதியான திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள நூற்றுக் கணக்கான மரங்களை கிரிக்கெட் மைதான திட்டத்துக்காக அழிக்கப் போகிறார்களே என ஆதங்கப்படுகிறார்கள் பசுமை பாதுகாவலர்கள்.
இதுகுறித்து பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி, “1981-ல் ஒண்டிப்புதூரில் 30 ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளி சிறைச்சாலை அமைக்கப்பட்டது. இங்கு இப்போது 950 தென்னை மரங்கள் உள்ளன. வேறு சில மரங்களும் உள்ளன.
தவிர, காய்கறிகளும் பல ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது. கிரிக்கெட் மைதானம் அமைவதால் இங்குள்ள விவசாய கட்டமைப்புகள் பாதிக்கப்படும். போக்குவரத்து நெரிசலும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்த இடத்துக்குப் பதிலாக நீலாம்பூர், சின்னியம்பாளையம் உள்ளிட்ட ஏதாவதொரு பகுதியில் மைதானத்தை அமைத்தால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் வராது; கோவையின் பசுமைக்கும் பங்கம் வராது” என்றார்.
இதுகுறித்து பேசிய கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும், சிங்காநல்லூர் முன்னாள் எம்எல்ஏ-வுமான நா.கார்த்திக், “கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் விளையாட்டுத்துறையில் கோவை அடுத்த கட்டத்துக்கு முன்னேறிச் செல்லும். விளையாட்டுத்துறையில் கோவைக்கு பெரிய அங்கீகாரம் கிடைக்கும். மைதானம் அமைந்தால் அது பலதரப்பட்ட மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு ஏற்ற இடமாக இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பில்லை. வெட்டப்படும் மரங்களுக்கு மாற்றாக அதைவிட கூடுதலான மரக் கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. அதனால் கோவையின் பசுமைச் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் வராது” என்றார்.
மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியோ, “சர்வதேச கிரிக்கெட் மைதானம் திறந்தவெளிச் சிறைச்சாலை வளாகத்தில் தான் அமைகிறது. அங்குள்ள மரங்கள் வெட்டப்படும் போது அதற்கு ஈடாக லட்சக் கணக்கில் மரக் கன்றுகள் நடப்பட்டு கோவையின் பசுமைச் சூழல் பாதுகாக்கப்படும். விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் கிரிக்கெட் மைதானத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. மண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அரசு ஒப்புதல் அளித்த பின்னர் அடுத்தடுத்த பணிகள் மேற்கொள்ளப்படும்” என்கிறார். தங்க நாற்கர சாலை திட்டத்திற்காக, நூற்றாண்டு கண்ட மரங்களை வெட்டிவிட்டு பதிலாக சாலை நடுவே பூச்செடிகளை வைத்து சமாளித்தது போல் அல்லாமல் சம்பந்தப்பட்டவர்கள் நியாயமாக சிந்திக்கட்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT