சொத்து குவிப்பு புகார்; பொன்முடி வழக்கில் ஏப்.7-ம் தேதி இறுதி விசாரணை தொடங்கும்: ஐகோர்ட்

சொத்து குவிப்பு புகார்; பொன்முடி வழக்கில் ஏப்.7-ம் தேதி இறுதி விசாரணை தொடங்கும்: ஐகோர்ட்
Updated on
1 min read

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை தினந்தோறும் என்ற அடிப்படையில் நடைபெறும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழக வனத் துறை அமைச்சர் பொன்முடி கடந்த 1996-2001 திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக கடந்த 2002-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிரான இந்த வழக்கை விசாரித்த வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, இருவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தானாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் இறுதி விசாரணை வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 17-ம் தேதி வரை தினந்தோறும் என்ற அடிப்படையில் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in