Published : 04 Feb 2025 12:39 AM
Last Updated : 04 Feb 2025 12:39 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, நாளை (பிப்.5) நடைபெறும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையடுத்து, அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை (பிப்.5) நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், திமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து, தேர்தல் தொடர்பான எந்தவொரு பிரச்சாரமோ, தொலைக்காட்சி, சினிமா உள்ளிட்ட இதர வழிமுறைகளிலோ தேர்தல் பரப்புரை மேற்கொள்ளக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் 3 நிலை கண்காணிப்பு குழுவினர், 3 தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், 12 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சோதனை சாவடிகளில், துணை ராணுவத்தினருடன் உள்ளூர் போலீஸார் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இத்தேர்தலில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக, 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றுள் 9 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான, சித்தோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகிறது. வாக்கு எண்ணும் மையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை 8-ம் தேதி காலை நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT