மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் நாளை ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் நாளை ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை (பிப்.4) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பெருமுதலாளிகளுக்கும் ஆதரவாக வரிச்சலுகைகளை வாரி வழங்கிவிட்டு, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீதும், விவசாயிகள் மீதும் வரிச்சுமைகளை மத்திய அரசு ஏற்றியுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தமிழகம், கேரளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக, எதேச்சதிகாரமாக செயல்பட்டு வரும் மத்திய அரசை கண்டித்து, அதன் நாசகர பட்ஜெட்டை எதிர்த்தும், தமிழகம் முழுவதும் மாநகரம், நகரம், பேரூர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாளை (பிப்.4) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில் கட்சி அணிகளும், அனைத்து பகுதி மக்களும், வணிகர்களும், ஜனநாயக இயக்கங்களும் கலந்து கொண்டு பேராதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in