திமுக கொடியை காண்பித்து பொய்யான வீண் பழி சுமத்தி... - அமைச்சர் ரகுபதி காட்டம்

திமுக கொடியை காண்பித்து பொய்யான வீண் பழி சுமத்தி... - அமைச்சர் ரகுபதி காட்டம்
Updated on
1 min read

சென்னை கிழக்கு கடற்கரை சாலை சம்பவத்தில் கைதான முக்கிய குற்றவாளி அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர் தெரிந்துவிட்டது. திமுக மீது பொய் பழி போட்ட எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி மன்னிப்பு கேட்பாரா என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பதிவில் நேற்று கூறியுள்ளதாவது: திமுக ஆட்சியின் நலத் திட்டங்களால் பெண்கள் முன்னேறுவதை எதிர்க்கட்சிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால், திமுக அரசு மீது பழி போட முயற்சிப்பதும், சில நாட்களிலேயே உண்மை தெரியவந்து, அந்த முயற்சி தோல்வியடைவதும் வாடிக்கையாகிவிட்டது.

அந்த வகையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் பயணித்த காரை வழிமறித்த விவகாரத்தில் சந்துரு என்ற முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். இவர் அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர் என தனது பின்புலத்தை அவரே ஒப்புக்கொள்ளும் வீடியோ, ஊடகங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. திமுக கொடியை காண்பித்து, திமுக மீது பொய்யான வீண் பழி சுமத்தி, அதன்மூலம் சுயநல அரசியல் செய்ய நினைத்தவர்களின் முகமூடி கிழிந்து தொங்குகிறது.

பெண்கள் மீதான பாலியல் தாக்குதல், போக்சோ குற்றங்கள் என அதிமுகவை சேர்ந்தவர்களும், அவர்களது குடும்பத்தினரும்தான் பெண்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர் என்பது ஒவ்வொரு குற்றச்செயலின் பின்புலத்தையும் ஆராய்ந்தால் தெரிய வருகிறது. திமுக மீது பொய் பழி போட்ட எதிர்க்கட்சிகள் இப்போது தங்கள் முகத்தை எங்கே கொண்டுபோய் வைத்துக் கொள்வார்கள். வீராவேசமாக அறிக்கைவிட்ட பழனிசாமி மன்னிப்பு கேட்பாரா. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in