தண்டனை கைதிகளுக்கு நிர்வாக பணி வழங்க கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

தண்டனை கைதிகளுக்கு நிர்வாக பணி வழங்க கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: சிறையில் தண்டனை கைதிகளுக்கு நிர்வாக பணிகளை வழங்க கூடாது என்று அறிவுறுத்தியுள்ள உயர் நீதிமன்றம், இதை உறுதிசெய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை புழல் சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ள கோதண்டன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘எனக்கு 30 நாட்கள் விடுப்பு (பரோல்) கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால், 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்தால் மட்டுமே விடுப்பு வழங்க முடியும் என்று கூறி, எனது விண்ணப்பத்தை சிறைத் துறை அதிகாரிகள் நிராகரித்து விட்டனர். எனவே, எனக்கு விடுப்பு வழங்க சிறைத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அக்‌ஷயா, ‘‘சிறையில் மனுதாரர் நன்னடத்தையுடன் செயல்படுகிறார். சிறைத் துறை அதிகாரிகளுக்கு உதவியாக பல்வேறு அலுவலக பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். அவர் மீது எந்தவித குற்றச்சாட்டும் இல்லை. எனவே, அவருக்கு விடுப்பு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்றார்.

இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் தமது தீர்ப்பில் கூறியதாவது: சிறையில் தண்டனை கைதிகளுக்கு சமையல், தோட்ட பராமரிப்பு போன்ற பணிகளை வழங்குவது வழக்கமான நடைமுறைதான். ஆனால், நிர்வாக ரீதியிலான அலுவலக பணிகளில் அவர்களை ஈடுபடுத்த கூடாது. மாதம்தோறும் ஊதியம் பெறும் சிறைத் துறை அலுவலர்கள் பார்க்க வேண்டிய வேலையை கைதிகள் மீது சுமத்துவது சரியல்ல. இதுபோன்ற செயல்களை ஏற்க முடியாது.

எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சிறைகளிலும் தண்டனை கைதிகள் மூலமாக நிர்வாக பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோல புகார் வந்தால், சம்பந்தப்பட்ட சிறைத் துறை அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும். மனுதாரர் கோதண்டனுக்கு 23 நாட்கள் விடுப்பு வழங்க சிறைத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in