Published : 01 Feb 2025 05:40 PM
Last Updated : 01 Feb 2025 05:40 PM

சிறை நிர்வாகப் பணிகளில் கைதிகளை ஈடுபடுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சிறைகளில் உள்ள தண்டனைக் கைதிகளை நிர்வாகப் பணிகளில் ஈடுபடுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் புழல் சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ள கோதண்டன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், “எனக்கு 30 நாட்கள் விடுப்பு (பரோல்) கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்தால் மட்டுமே விடுப்பு வழங்க முடியும் எனக் கூறி எனது விண்ணப்பத்தை சிறைத்துறை அதிகாரிகள் நிராகரித்து விட்டனர். எனவே எனக்கு விடுப்பு வழங்க சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும், என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அக்க்ஷயா, “மனுதாரர் சிறையில் நன்னடத்தையுடன் செயல்பட்டு வருகிறார். சிறைத்துறை அதிகாரிகளுக்கு உதவியாக பல்வேறு அலுவலக பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். அவர் மீது எந்தவித குற்றச்சாட்டுகளும் இல்லை. எனவே அவருக்கு விடுப்பு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்,” என்றார்.

அப்போது நீதிபதிகள், “சிறையில் பொதுவாக தண்டனை கைதிகளுக்கு பணி வழங்குவது வழக்கமான நடைமுறைதான். தண்டனைக் கைதிகள் சமையல், தோட்டப் பராமரிப்பு உள்ளிட்ட இதர வேலைகளில் ஈடுபடுத்தப்படுவர். ஆனால் நிர்வாக ரீதியிலான அலுவலக பணிகளில் தண்டனைக் கைதிகளை ஈடுபடுத்தக் கூடாது. மாதம்தோறும் ஊதியம் பெறும் சிறைத்துறையினர் அவர்கள் பார்க்க வேண்டிய வேலையை சிறைக் கைதிகள் மீது சுமத்துவது எப்படி சரியாகும்?.

இதுபோன்ற செயல்களை ஏற்க முடியாது. எனவே தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சிறைகளிலும் தண்டனைக் கைதிகள் மூலமாக நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவில்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோல புகார் வந்தால் சம்பந்தப்பட்ட சிறைத்துறை அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும்,” என எச்சரித்தனர். பின்னர் மனுதாரர் கோதண்டனுக்கு 23 நாட்கள் விடுப்பு வழங்க சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x