வேலூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே நிக்கல்சன் கால்வாயில் கையுறை, பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தூய்மை பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள். | படம்: வி.எம்.மணிநாதன் |
வேலூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே நிக்கல்சன் கால்வாயில் கையுறை, பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தூய்மை பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள். | படம்: வி.எம்.மணிநாதன் |

கால்வாயில் கைகளால் கழிவுகளை அகற்றும் தூய்மைப் பணியாளர்கள்! - வேலூர் அதிர்ச்சி

Published on

வேலூர்: வேலூரில் நிக்கல்சன் கால்வாய் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப்பணியாளர்கள் கைகளால் கழிவுகளை அகற்றும் பணி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் நகரில் உள்ள நிக்கல்சன் கால்வாய் முழுவதும் தூர்வாரும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

இந்த பணியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் இயந்திரங்களை பயன்படுத்தியும் தூர்வாரி வருகின்றனர். கால்வாய் தூர்வாரும் பணியின் ஒரு பகுதியாக கால்வாயின் பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவற்றை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்கிடையில், கால்வாய் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் முறையாக பாதுகாப்பு கையுறை, காலணி உள்ளிட்டவற்றை அணியாமல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கால்வாயில் தேங்கியுள்ள கழிவுகளை கைகளால் அகற்றுவது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை கொண்டு தூய்மைப் பணியில் ஈடுபடுவதை மாநகராட்சி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

உபகரணங்கள் பயன்படுத்துவதில்லை... - இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை நாங்கள் முன்கூட்டியே கொடுத்து விடுகிறோம். அதை அவர்கள்தான் பயன்படுத்த வேண்டும். ஒரு சிலர் அந்த உபகரணங்களை பயன்படுத்தி தூய்மைப் பணியில் ஈடுபடுவது கடினமாக இருப்பதாக கூறுகின்றனர். அவற்றை அணிந்து பணியில் ஈடுபடுமாறு அறிவுரை கூறுகிறோம்’’ என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in