திருமங்கலம் - ராஜபாளையம் நான்கு வழிச்சாலை பணியால் விபத்து: சுரங்கப்பாதை வசதி கோரி மக்கள் மறியல்

திருமங்கலம் - ராஜபாளையம் நான்கு வழிச்சாலை பணியால் விபத்து: சுரங்கப்பாதை வசதி கோரி மக்கள் மறியல்
Updated on
2 min read

மதுரை: திருமங்கலம் - ராஜபாளையம் நான்கு வழிச்சாலை பணியால் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் சுரங்கப்பாதை வசதி கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். அவருக்கு ஆதரவாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் 3 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான பணிகள்தொடங்கப்பட்டு தற்போது திருமங்கலம் - ராஜபாளையம் சாலையில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தில் சாலையின் ஒருபுறம் அரசு பள்ளிக்கூடம்,ரேஷன் கடை மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் அரசுடமையாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. மறுபுறத்தில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கிராமத்தில் உள்ளது.

இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள்,பெண்கள் வயதானவர்கள் என சாலையை கடந்து செல்லும்போது அடிக்கடி விபத்து ஏற்பட்டு இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். எனவே அப்பகுதியில் சாலையை கடப்பதற்கு கிராமத்தில் சுரங்கப்பாதை ஏற்படுத்திக் கொடுத்து அதன் பின்னர் நான்கு வழிச்சாலை பணியை தொடங்க வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமாரும், அப்பகுதி மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார்.

அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் 500-க்கும் கமேற்பட்ட கிராம மக்கள், பள்ளி குழந்தைகளுடன் திருமங்கலம் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு பட்டனர். போலீஸார், வருவாய்த் துறை அதிகாரிகள், அவர்களை சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்கள் தங்களுக்கு சுரங்கப்பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என உறுதியளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம். இல்லையென்றால் அதுவரை கைவிடமாட்டோம் எனத் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் முன்னாள் அமைச்சருமான ஆர் பி உதயகுமார், சம்பவ இடத்துக்குச் சென்று பொது மக்களுக்கு ஆதரவாக அவர்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். ஆலம்பட்டியில் 3 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடந்ததால் திருமங்கலம் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் போலீஸார், பேராட்டத்தில் ஈடுபட்ட ஆர்பி.உதயகுமார், பொதுமக்களை கைது செய்தனர்.

ஆர்.பி.உதயகுமார் பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலை ஆலம்பட்டியை தவிர்த்து மற்ற ஊர்களிலெல்லாம் நான்கு வழிச்சாலை புறவழிச்சாலையாக கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், ஆலம்பட்டி கிராமத்தில் மட்டும் ஊருக்குள்ளே நான்கு வழி சாலை அமைவதால் நான்கு வழிச்சாலைக்காக இப்பகுதி மக்கள் தங்களின் பட்டா நிலங்களை விட்டுக் கொடுத்தனர்.

ஆனால், சாலையின் ஒருபுறம் குடியிருப்புகளும் மறுபுறம் பள்ளிக்கூடம் ரேஷன் கடை உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கான அலுவலகங்கள் இருப்பதால் சாலையை கடந்து செல்ல சுரங்கப்பாதை அமைக்க கேட்கின்றனர். உங்களைத் தேடி, உங்கள் ஊரில் என்ற திட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் நானும்,பொதுமக்களும் கோரிக்கை வைத்தோம், இதை நாங்கள் பரிசீலனை செய்வதாக கூறினார்கள், மக்களின் நியாயமான கோரிக்கைகளை செய்வதுதான் அரசின் கடமை. அரசு அலட்சியமாக இருப்பதால் நம்பிக்கையிழந்து மக்கள் சாலைக்கு வந்து போராட வேண்டிய உள்ளது,’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in