Published : 30 Jan 2025 06:28 AM
Last Updated : 30 Jan 2025 06:28 AM
சென்னை: ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சுற்றுச்சூழல் அனுமதியின்றி செயல்பட்ட காலத்தின் அடிப்படையில் கணக்கீடு செய்து சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகை வசூலிக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மீனவர் தந்தை கே.ஆர்.செல்வராஜ்குமார் மீனவர் நலச்சங்க தலைவர் எம்.ஆர்.தியாகராஜன் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த 2022-ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தாலுகா, நூம்பல் கிராமத்தில் 78,103 சதுர மீட்டர் பரப்பில் ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
இத்திட்டம் தொடங்க முன்கூட்டியே சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது கட்டாயம். ஆனால் முன்கூட்டியே பெறவில்லை. இந்த மருத்துவமனையிலிருந்து உருவாகும் உயிரி மருத்துவக் கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்படவில்லை. இது பொதுமக்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதிக்கும்.
இம்மருத்துவமனையில் இருந்து முறையாக சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் பொது வடிகாலில் விடப்படுகிறது. மத்திய நிலத்தடிநீர் ஆணையத்தில் உரிய அனுமதி பெறாமல் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமீறல் கட்டிடங்களை இடிக்க வேண்டும். அதனிடம் சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகை வசூலிக்க வேண்டும். இவ்வாறு மனுதாரர் கோரியிருந்தார்.
இது தொடர்பாக ஆய்வு நடத்த கூட்டுக்குழு ஒன்றை பசுமைத் தீர்ப்பாயம் அமைத்தது. அக்குழு தாக்கல் செய்த அறிக்கையில், ``ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளது. உரிய சுற்றுச்சூழல் அனுமதியின்றி கூடுதல் கட்டிடங்களும் கட்டப்பட்டு வருகின்றன. அதனால் மருத்துவக் கல்லூரிக்கு ரூ.3.38 கோடி சுற்றுச்சூழல் ஈழப்பீட்டு தொகை விதிக்கலாம்'' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில், ``சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், நிறுவன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை முறையாக பராமரிக்கப்படவில்லை'' எனக் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் நேற்று முன்தினம் வழங்கினர். அதில் கூறியிருப்பதாவது:
இந்த மருத்துவக் கல்லூரி. கடந்த 2008-ம் ஆண்டுமுதல் சுற்றுச்சூழல் முன் அனுமதியின்றி செயல்பட்டு வந்துள்ளது. எனவே அன்று முதல் மருத்துவக் கல்லூரி விதிமீறலில் ஈடுபட்டு வருகிறது. எத்தனை நாட்கள் விதிமீறலில் ஈடுபட்டுள்ளது எனக் கணக்கிட்டு, அதற்கேற்ப சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும், தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையமும் மதிப்பிட்டு வசூலிக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT