Published : 30 Jan 2025 06:15 AM
Last Updated : 30 Jan 2025 06:15 AM

சென்னை கீழ்ப்​பாக்கம் அரசு மருத்​துவ​மனை​யில் புதிய கட்டிடம் விரை​வில் திறப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரூ.362.87 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய டவர் பிளாக் கட்டிடம் விரைவில் திறக்கப்படவுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள புதிய டவர் பிளாக் கட்டிடத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.

தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் லியோ டேவிட், மருத்துவமனை கண்காணிப்பாளர் பாஸ்கர், ஆர்எம்ஓ வாணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இந்திய அளவில் தீக்காய சிகிச்சைகளுக்கு பெயர் பெற்றது. இங்கு கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஏராளமான மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த தீவிர மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு (சீமாங்) இம்மருத்துவமனையில் இயங்கி வருகின்றன.

சீமாங் பிரிவு கட்டிடத்தின் கீழே 27 மீட்டர் அளவில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுவதால், அறுவை அரங்கங்கள், சீமாங் பிரிவு ஆகியவை புதிய கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றன. வரும் காலங்களில் புதிய இடத்தில்தான் இந்த சிகிச்சைப் பிரிவுகள் இயங்கும்.

இந்த புதிய கட்டிடம் ரூ.362.87 கோடியில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (JICA) நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ளது. ரூ.200.66 கோடியில் கட்டிடங்கள், ரூ.162.21 கோடியில் மருத்துவ உபகரணங்கள் என மொத்தம் ரூ.362.87 கோடி செலவிடப்படுகிறது. 2,68,815 சதுர அடி பரப்பில் தரைத்தளத்துடன் கூடிய 6 தளங்கள், 468 படுக்கை வசதிகள், 16 அறுவை அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இந்த கட்டிடத்தில் சிறுநீரகவியல், மயக்கவியல், நரம்பியல், இதயவியல், இறைப்பை மற்றும் குடல் நோய் துறை போன்ற துறைகள் படிப்படியாக இடமாற்றம் செய்யப்படும்.

ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதி ஆதாரத்துடன் கீழ்ப்பாக்கம், மதுரை, கோவை ஆகிய 3 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும், ஆவடி, வேலம்பாளையம், அம்மாபேட்டை, கண்டியப்பேரி ஆகிய 4 இடங்களிலும் மருத்துவமனைகள் கட்டுவதற்கு ரூ.1,634 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் இந்த அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு 19 இடங்களில் மட்டுமே மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் இருந்தன. புதிதாக 25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் பயன்பாட்டுக்கு மிக விரைவில் வர உள்ளன. இந்த 25 மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு ரூ.1,018 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன.

இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48 திட்டம் மூலம் கடந்த மூன்றரை ஆண்டுகளில் இதுவரை 3,20,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு விபத்து சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இதற்காக ரூ.283 கோடி நிதி செலவிடப்பட்டுள்ளது. விபத்துகளிலிருந்து உயிர்கள் காப்பாற்றப்படுவதில் உலகளவில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x