நவாஸ்கனி எம்.பி மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

நவாஸ்கனி எம்.பி மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி
Updated on
1 min read

சென்னை: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2019-ல் நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது, ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் போட்டியிட்ட நவாஸ்கனி, கமுதி பகுதியில் தேர்தல் அதிகாரியின் அனுமதி பெறாத வாகனத்தில் பிரச்சாரம் செய்ததாக அவர் உள்ளிட்ட பலர் மீது கமுதி போலீஸார் தேர்தல் விதிமீறல் வழக்கை பதிவு செய்திருந்தனர்.

ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி எம்பி நவாஸ் கனி உள்ளிட்ட ஏழு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், இந்த வழக்கு அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில் எங்களுக்கு எதிராக பதியப்பட்டுள்ளது என்பதால் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். அத்துடன் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும், எனக் கோரியிருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி. வேல்முருகன் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரரான எம்பி நவாஸ்கனி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளதால், இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in